சினிமா செய்திகள்

ரஜினி, கமலை மிரட்டிய வில்லன் நடிகர்.. சிவாஜியின் நடிப்பை பார்த்து நடுங்கிய சம்பவம்

By Arun · 31 ஆக 2022 · Updated 08 மே 2025
sivaji-kamal-rajini

ரஜினி, கமலையே வச்சு செய்து மிரட்டிய வில்லன் நடிகர் ஒருவர் , ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து பயந்து மிரண்டு போயிருக்கிறார். அவருடன் நடிக்கவே பயந்து இருக்கிறார் அந்த உயர்ந்த நடிகர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் தொடர்ந்து எட்டு படங்கள் நடித்துள்ளனர்.

நடிகர் திலகம், செவாலியர் சிவாஜி எண்பதுகளுக்கு பிறகு பிற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, பாண்டியராஜன், அஜய் கிருஷ்ணா, பாக்யராஜ் என அப்போதைய நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளியான படம் தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கிய படம். குற்றவாளியான சத்யராஜை நீதிபதி சிவாஜி தன்னுடைய சொந்த கஸ்டடியில் எடுப்பார். அப்போது அவர்களுக்குள் நடக்கும் மோதலும், நட்பும் தான் இந்த கதை. இந்த படத்தில் சிவாஜியுடன் நடிக்க சத்யராஜ் ரொம்ப பயந்து இருக்கிறார்.

70 களின் இறுதியில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சத்யராஜ். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த இவர் அதன் பின்னர் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து பட்டையை கிளப்பினார். விஜயகாந்த் , மோகன் படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் கமலுடன் காக்கி சட்டை, ரஜினியுடன் மிஸ்டர் பாரத் படங்களில் வில்லனாக மிரட்டி இருப்பார்.

முதன் முதலில் இயக்குனர் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தில் கதாநாயகனாக நடித்தார் சத்யராஜ். இவர் நடித்த வேதம் புதிது, அமைதிப்படை, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சின்ன தம்பி பெரிய தம்பி திரைப்படங்கள் இவருக்கு கோலிவுட்டில் நல்ல அங்கீகாரத்தை கொடுத்தன.

வேதம் புதிது பாலு தேவர், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு மாதவ படையாட்சி, அமைதிப்படை அமாவாசை, நண்பன் விருமாண்டி சந்தானம், பாகுபலி கட்டப்பா இது போன்ற சத்யராஜின் கேரக்டர்களை தமிழ் சினிமா இருக்கும் வரை யாராலும் மறக்க முடியாது.