சினிமா செய்திகள்

சக நடிகையையே காதலித்து திருமணம் செய்த செந்தாமரை.. முரட்டுத்தனமான வில்லனின் மறைக்கப்பட்ட காதல் கதை

சினிமாவில் வில்லன் நிஜத்தில் ஹீரோவான செந்தாமரையின் காதல் கதை

By Arun · 24 ஆக 2023 · Updated 10 மே 2025
senthamarai

Actor Senthamarai: தாய் சொல்லை தட்டாதே படத்தில் போலீஸ் அதிகாரியாய் இடம் பெற்று, தன் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியவர் தான் செந்தாமரை. மேலும் ரஜினியின் மூன்று முகம் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்ற இவரின் ரகசிய காதல் கதை பற்றிய தகவலைத் இத்தொகுப்பில் காணலாம்.

பழம்பெரும் நடிகரான செந்தாமரை வில்லன் கதாபாத்திரம் மேற்கொண்ட படங்களான பொல்லாதவன், கழுகு, மூன்று முகம் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவரின் முரட்டுத்தனமான நடிப்பை கண்டு தெறித்து ஓடிய ஹீரோயின்கள் ஏராளம். கமல், ரஜினி காலத்தில் சிறந்த வில்லனாய் பல படங்களில் ஸ்கோர் செய்தவர் செந்தாமரை.

1957ல் வெளிவந்த மாயாபஜார் படத்தில் சிறிய கதாபாத்திரம் ஏற்று அறிமுகமான இவர் அதன்பின் கம்பீரமான போலீஸ் கதாபாத்திரத்திலும், மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக மூன்று முகம் படத்தில் ஏகாம்பரம் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு நிகரான பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வில்லத்தனத்தை கண்டு பயந்து ஓடிய ஹீரோயின்களிடையே, காதலித்து மணந்த மனைவி கௌசல்யா செந்தாமரையின் பதிவை இங்கு காண்போம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் வில்லி பாட்டி தான் கௌசல்யா. சினிமாவில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவரை செந்தாமரை துரத்தித் துரத்தி காதலித்தாராம். இவரின் வில்லத்தனத்தால் நிராகரித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் மனைவியாகவே மாறிவிட்டாராம்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட செந்தாமரை கௌசல்யாவிடம் புத்தகம் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க வீடு திரும்பிய போது அவர்களின் பெற்றோர்களால் திட்டு வாங்கினாராம். அதைத்தொடர்ந்து நாடகம் நடிக்கும் இடத்தில் புத்தகத்தை திருப்பி கொடுத்தபோது செந்தாமரை மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின் இருவருடையே காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டதாகவும் கௌசல்யா சமீபத்தில் பேட்டி ஒன்று பதிவு செய்தார். மேலும் மாரடைப்பால் இறந்த செந்தாமரை நிஜத்தில் ஹீரோவாக என்னை ராணி போல் வாழ வைத்ததாகவும் மனம் திறந்து பேசி உள்ளார்.