நடிகர்களை காமெடியில் ஓரங்கட்டிய வடிவேலுவின் 6 படங்கள்.. இப்பவரைக்கும் கொண்டாடப்படும் கைப்புள்ள கதாபாத்திரம்

மதுரையில் ஏதோ ஒரு கிராமத்தில் புகைப்படங்களுக்கு பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த வடிவேலு, வைகை புயல் வடிவேலு ஆனதே ஒரு சுவாரஸ்யமான கதை. நடிகர் ராஜ்கிரண் மூலம் அறிமுகமானவர் தான் வடிவேலு. ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து கொண்டிருந்த வடிவேலு, பின்பு கவுண்டமணி, செந்தில் கூட நடிக்க ஆரம்பித்து பின்னாளில் தனக்கான வெற்றிக்கொடியை நாட்டினார்.

வடிவேலுவை வைத்து தான் தமிழ்நாட்டின் மீம்ஸ் உலகமே இயங்கி கொண்டிருக்கிறது. மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுள் என்றே வடிவேலுவை சொல்லலாம். வடிவேலு பேசிய வசனங்கள் நம் அன்றாட வாழ்வில் இயல்பாக கலந்து விட்டது. அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பல நம் மனதில் என்றும் நீங்காமல் இருக்கும்.

நேசமணி: வடிவேலுவின் கான்டராக்டர் நேசமணியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. விஜய், சூர்யா என்ற இரண்டு கதாநாயகர்களுடன் இவர் நடித்தாலும், இன்றும் பிரண்ட்ஸ் படத்தை பற்றி நினைத்தால் முதலில் நியாபகம் வருவது வடிவேலுவின் காமெடி சீன்கள் தான். பல வருடங்களுக்கு பிறகு கூட சமூக வலைதளத்தில் திடீரென்று ஒரு நாள் கான்டராக்டர் நேசமணி ட்ரெண்ட் ஆனார்.

கைப்புள்ள: சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் தான் நிஜமான ஹீரோ. கைப்புள்ள மற்றும் அவருடைய வருத்தப்படாத வாலிபர் சங்கமும் இன்றும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் தான்.

இம்சை அரசன்: இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு முதன் முறையாக ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. ஒரு பக்கம் உக்கிரபுத்தன் ஹீரோவாக டரியல் செய்தாலும் மற்றொரு பக்கம் இம்சை அரசனான புலிகேசி வழக்கமான வடிவேலுவாக நம்மை சிரிக்க வைத்திருப்பார்.

வடிவு: அவ்வை சண்முகி படத்திற்கு பிறகு வடிவேலு தான் பக்காவாக பெண் வேடத்தில் படம் முழுவதும் நடித்தவர். பாட்டாளி படத்தில் வடிவேலு வடிவு என்னும் பெண் வேடத்தில் நடித்திருப்பார். இதில் வடிவேலு, சிசர் மனோகர், கோவை சரளா, அனு மோகன் கூட்டணியில் காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பி இருக்கும்.

அழகு: தன்னுடைய பாஸ்போர்ட்டை எலி கடித்து கிழித்ததால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் தன் மாமன் மகனுடன் பஸ்ஸிலேயே இருக்கும் அழகு கேரக்டரில் வடிவேலு நடித்திருப்பார். சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலு-முரளி காம்போவில் காமெடி சீன்கள் பக்காவாக இருக்கும். இந்த படத்தில் முரளியும், வடிவேலும் சேர்ந்து போண்டா மணிக்கு கல்யாண மேக்கப் போடும் சீன் காமெடியில் உச்சம்.

நாய் சேகர்: தலைநகரம், சுந்தர் சி முதன் முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம். இந்த படத்தின் மிகப்பெரிய பக்க பலமே நாய் சேகர் கேரக்டர் தான். அந்த படத்தில் வடிவேலு பேசிய ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ வசனம் இன்றும் மிகப்பிரபலம்.