சாப்பாட்டுக்கு கூட காசு இல்ல, தங்க டாலரை பரிசளித்த நடிகர்.. கலாமிற்கு பின் விவேக்கே வியந்து பார்த்த ஒரே மனிதர்

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பல திரைப்படங்களில் தனது சமூக சிந்தனை நகைச்சுவையை ரசிகர்களுக்கு காட்சியளித்து இன்றுவரை நம் அனைவரின் மனதிலும் குடிபெயர்ந்தவர். விவேக்குடன் பல இணை நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அதில் முக்கியமானவர் தான் நடிகர் மயில்சாமி, தூள் திரைப்படத்தில் விவேக், மயில்சாமி இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு எப்போதும் பிரியமானது. அதேபோல பாளையத்தம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடியும் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விவேக் மயில்சாமி செய்த ஒரு வியக்கத்தக்க செயலை மேடையில் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். அதில் 2004ஆம் ஆண்டு சென்னையில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் உள்ள பல்வேறு இடங்களில் வந்த சுனாமி காரணமாக பல மக்கள் அவதிப்பட்டனர்.

அந்த சமயத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், சுனாமியால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் கடலூரில் உள்ள தேவதானப்பட்டி என்ற ஊரில் வந்து, அங்குள்ள மக்களுக்கு பல உதவிகளை செய்தார். இதனை அறிந்து கொண்ட மயில்சாமி அவரை சென்று சந்தித்து தனது ஆதரவையும் தெரிவித்துள்ளாராம்.

அவரிடம் பேசியது மட்டுமில்லாமல், மயில்சாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்பதால், எம்.ஜி.ஆரின் முகம் பொருந்திய டாலரை தனது வயிறுவரை மயில்சாமி அணிந்திருப்பராம். இந்த நிலையில் எங்கிருந்தோ வந்து நம் தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்யும் விவேக் ஓபராய்க்கு, அந்த டாலரை அந்த இடத்திலேயே அவரது கழுத்தில் போட்டு அணிவித்தாராம்.

அந்த சமயத்தில் மயில்சாமியிடம் படங்களே இல்லையாம், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லையாம் அப்படி இருக்கும் பட்சத்தில் மனித நேயத்துடன் செயல்பட்டதற்காக தனது நன்றியை தெரிவிக்கும் வகையில், தான் அணிந்திருந்த தங்க சங்கிலி டாலரை ஒருத்தருக்கு பரிசாக வழங்குகிறார் என்றால் மயில்சாமிக்கு எவ்வளவு பெரிய மனசு என்று நடிகர் விவேக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.