நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக ஆட்சி செய்து வருகிறார். அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலமாக பாலிவூட்டிலும் காலடி எடுத்து வைக்க உள்ளார். அழகோடு சேர்ந்து திறமையும் அதிகம் கொண்ட நடிகை. டாப் ஹீரோக்களுக்கு சமமாக ஏன் அவர்களை விட அதிகமாகவே சம்பளம் வாங்கும் ஒரே நடிகை இவர்தான்.
மாயா: நயன்தாரா முதன்முறையாக தனி கதாநாயகியாக நடித்த திரைப்படம் மாயா. தைரியமாக நயன்தாரா எடுத்து வைத்த அடிக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படத்தை நயன்தாரா மட்டுமே தன்னுடைய தோளில் சுமந்தார் என்றே சொல்லலாம். 50 நாட்களை தாண்டி தியேட்டர்களில் ஓடிய இந்த படம் 45 கோடி வசூல் செய்தது.
நானும் ரவுடி தான்: நயன்தாரா அதுவரை நடிக்காத கதாபாத்திரம் காதம்பரி. துறுதுறுவென்று இருக்கும் பெண்ணாகவும் அதே நேரத்தில் காதல், காமெடி, சோகம், வன்மம் என அத்தனை உணர்ச்சிகளையும் சிறப்பாக காட்டியிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்திற்காக நயன்தாரா அதிக விருதுகளையும் வாங்கியிருந்தார்.
ஸ்ரீ ராம ராஜ்யம்: தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ராமாயணக் கதையை எடுத்த இயக்குனர் பாபு நயன்தாராவை சீதையாக தேர்ந்தெடுத்தார். நயன்தாரா அப்போது பிரபுதேவாவுடன் காதலில் இருந்ததால் சீதை கதாபாத்திரத்தில் அவர் நடிக்க கூடாதென பல எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்புகளுக்கிடையே நயன்தாரா சீதையாக நடித்து பலதரப்பட்ட பாராட்டுகளையும் பெற்றார்.
மூக்குத்தி அம்மன்: நடிகைகள் மீனா, ரோஜா வரிசையில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்த படம் மூக்குத்தி அம்மன். இதில் நயன்தாரா கொஞ்சம் மாடர்ன் அம்மனாகவே இருந்தார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாகவே அமைந்துவிட்டது. ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
பில்லா: நயன்தாரா உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த படம் தான் பில்லா. சந்திரமுகி மற்றும் ஐயா போன்ற படங்களில் குழந்தைத்தனமாக இருந்த நயன்தாரா கைகளில் துப்பாக்கியுடன் மிரட்டியிருந்தார். அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.