லோகேஷ் கனகராஜ் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் ஆகி விட்டார். இதற்கு காரணம் இவர் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என்ற மிகப்பெரிய நடிகர்களை வைத்து கொடுத்த மிகப்பெரிய ஹிட்டான படம் விக்ரம். இந்த படம் தான் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவின் தற்போதைய வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் மிகப்பெரிய நடிகர்களுடன் கைகோர்க்கும் போது வென்றே தீர வேண்டும் என்ற அழுத்தத்தில் ஏதோ ஒன்றை கோட்டை விட்டு விடுவார்கள், அந்த கதாநாயகர்களுடைய ரசிகர்களின் தாக்கம் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் லோகேஷ் கனகராஜ் இதற்கெல்லாம் விதிவிலக்கானவர்.
இவருடைய முதல் படமான மாநகரம் சாதாரண பட்ஜெட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட கதை. இந்த படம் குறிப்பிட்ட அளவு லாபம் தந்தது. பின்னர் 2 வருடங்களுக்கு பிறகு இவரே எழுதி இயக்கிய படமான கைதி படம் ரிலீஸ் ஆனது. இரண்டாவது படத்திலேயே இவருக்கு கார்த்தியுடன் வாய்ப்பு கிடைத்தது அவருடைய கதைக்காகவே. இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
கைதி வெற்றியினால் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தி கை கோர்த்தார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்ததிலேயே லோகேஷ் பாதி ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். இந்த படம் உலக அளவில் 300 கோடி வசூலை எட்டியது. படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கும் இயக்குனர்களிடையே லோகேஷ் தன்னுடைய 4வது படத்திலேயே கமலுடன் கை கோர்த்தார்.
கோலிவுட்டின் மிக உயரிய நட்சத்திரத்துடன் பணியாற்றுகிறோம் என்ற பயம் இல்லாமல் ஒரு ரசிகனாக கமலை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டாரோ அப்படியே நடிக்க வைத்துவிட்டார் என்றே சொல்லலாம். சினிமாவின் மொத்த ரசிகர்களும் இப்போது லோகேஷை கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். பின்பு சினிமாவின் மீதான தீராத காதலால் வாங்கி பணியை விட்டுவிட்டு திரைத்துறைக்கே வந்து விட்டார். லோகேஷ் வங்கியில் பணிபுரியும் போது மாதம் 8000 சம்பளம் வாங்கியிருக்கிறார். விக்ரம் படத்தின் மூலம் 500 கோடி வசூலை தாண்டிய லோகேஷ் கனகராஜ்ஜின் தற்போதைய சம்பளம் கிட்டத்தட்ட 6 கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.