மூச்சு விடாமல் SPB பாடிய பாடல்கள்.. நமக்கு தெரிஞ்சது கேளடி கண்மணி, இன்னொரு ஹிட் யாருக்கு தெரியுமா?

SPB என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் SP பாலசுப்ரமணியம் 16 மொழிகளில், 40, 000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் வெறும் பாடகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்தார்.

நடிகர்களுக்கு ஏற்றபடி குரலை மாற்றி பாடும் SPB, அவருடைய வாழ்நாளில் மொத்தம் 2 பாடல்களை மூச்சு விடாமல் பாடி இருக்கிறார். இதை அவர் ரெகார்டிங் தியேட்டரில் மட்டுமில்லாமல், ஒரு சில மேடைகளிலும் பாடியிருக்கிறார். இத்தகைய சாதனைகளுக்கு உரிய அவர் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காலமடைந்தார்.

கேளடி கண்மணி : கேளடி கண்மணி இயக்குனர் வசந்தின் முதல் திரைப்படம் ஆகும். 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் SP பாலசுப்ரமணியம் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ராதிகா, ரமேஷ் அரவிந்த், கீதா, விவேக் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் 200 நாட்கள் திரை கண்டது.

இந்த படத்தில் ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடலை தான் அவர் மூச்சு விடாமல் பாடி இருந்தார். இந்த பாடலை வரதராஜன் எழுதி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். தமிழக அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை SPB வாங்கினார்.

அமர்க்களம்: அமர்க்களம் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியானது. அஜித் குமார், சாலினி, ரகுவரன், நாசர் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாட்டை தான் SPB மூச்சு விடாமல் பாடியிருந்தார். முதலில் ‘சத்தம் இல்லாத தனிமை வேண்டும்’ என்று எழுதப்பட்ட பாடல், பிறகு ஒவ்வொரு முடிவிலும் கேட்டேன் என்று மாற்றப்பட்டது.