விஜயகாந்தின் ‘ஊமை விழிகள்’ பட வெற்றிக்கு பிறகு வந்த மிகப்பெரிய வெற்றிப்படம் என்றால் அது ‘கூலிக்காரன்’. இந்த படத்தில் தான் விஜயகாந்துக்கு ‘புரட்சி கலைஞர்’ என்னும் பெயர் வந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து ரீமேக் செய்யப்பட்டது.
விஜயகாந்த் ரூபிணி நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கினார். ஜெய் சங்கர், ராதா ரவி, நாகேஷ், ஸ்ரீ வித்யா, குமரி முத்து, சில்க் ஸ்மிதா நடித்த இந்த திரைப்படத்தை S. தாணு தயாரித்திருந்தார். இந்த படம் 50 லட்சம் லாபம் கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தாணு கதை எழுதி, இயக்கி, இசையமைத்து புதிய பாடகன் என்னும் படத்தை தயாரித்தார். இந்த படத்தில் மீண்டும் விஜயகாந்தை நடிக்க வைத்தார். அமலா, சரத்குமார், ராதா ரவி, சின்னி ஜெயந்த், ஆனந்த ராஜ், தளபதி தினேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தோல்வியை தழுவியது.
எனவே தாணு அதன் பிறகு படங்களை இயக்குவதை எல்லாம் நிறுத்தி கொண்டு தயாரிப்பு வேலைகளை மட்டும் பார்த்து கொண்டிருந்தார். வண்ண வண்ண பூக்கள், கிழக்கு சீமையிலே, VIP போன்ற நல்ல படங்களை தயாரித்து வெற்றி மேல் வெற்றி கண்டு கொண்டிருந்தார்.
அப்போது சினிமா இண்டஸ்ட்ரியில் தனியாக ஒரு க்ரூப் செயல்பட்டு கொண்டிருந்தது. அவர்களை தவிர வேறு யாரும் படம் வாங்கி விற்க கூடாது என்ற முடிவில் சுற்றி கொண்டிருந்தனர். அவர்களது அடுத்த டார்கெட்டாக அப்போது வளர்ந்து வந்த தயாரிப்பாளர் S.தாணுவாக இருந்தார்.
இதை எப்படியோ கேள்விபட்ட விஜயகாந்த் தாணுவை கூப்பிட்டு பேசியிருக்கிறார். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் வந்து நிற்ப்பேன் என்று ஆறுதல் கூறி அனுப்பி இருக்கிறார். விஜயகாந்த் இது போன்று பலருக்கும் உதவி செய்து இருக்கிறார்.