அஜித்தின் சூப்பர் ஹிட் படத்திலிருந்து பாதியிலேயே கழண்ட சீரியல் ஆக்டர்.. கிளைமாக்சை மாற்றிய தயாரிப்பாளர்

Actor Ajith Kumar: பொதுவாக ஒரு படத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் முடிவு செய்யப்பட்டு இறுதியாக ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் படத்தை விட்டு விலகுவது அல்லது விலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இயல்பாக நடப்பதுண்டு. ஆனால் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்த சீரியல் ஆக்டர் ஒருவர் பாதி படத்தை முடித்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றதால், அஜித்துக்கு அந்த பட வாய்ப்பு கிடைத்து மீண்டும் முதலில் இருந்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் அஜித்குமார் அவ்வளவு எளிதாக சினிமாவில் வெற்றி பெறவில்லை. ஆரம்ப காலங்களில் அவர் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் அப்போதெல்லாம் அவர் தன் சொந்த குரலில் கூட பின்னணி பேசியதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அஜித்துக்கு அடுத்தடுத்து நிறைய காதல் படங்கள் கை கொடுத்ததினால் தான் அவர் வெற்றியை பார்க்க ஆரம்பித்தார். இதனாலேயே அவருக்கு அப்போது காதல் மன்னன் என்ற பெயரும் இருந்தது.

அமராவதி, வான்மதி, ஆசை, பவித்ரா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் காதல் கோட்டை. இது அஜித்துக்கு மட்டுமில்லாமல் அந்தப் படத்தின் இயக்குனர் அகத்தியன், கதாநாயகி தேவயானி என எல்லோருக்குமே சினிமாவில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கி கொடுத்தது தான் இந்த படம். ஆனால் இந்த படத்தின் முதலில் அஜித் நடிப்பதாகவே இல்லையாம்.

காதல் கோட்டை திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தவர் சீரியல் ஆக்டர் அபிஷேக். இவரை வைத்து பாதி படம் எடுத்த பிறகு அபிஷேக் திடீரென படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் மீண்டும் நடிகர் அஜித்குமாரை ஒப்பந்தம் செய்து புதிதாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியல் நடிகர் அபிஷேக் யார் என்றால் கோலங்கள் நாடகத்தில் அபி என்னும் கேரக்டரில் நடித்த தேவயானியின் கணவராக நடித்தவர் தான்.

இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணியதை எண்ணி பல நாட்கள் தான் வருந்தியதாக அபிஷேக் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே கடிதத்தின் மூலம் பேசி அதன் பின்னர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு, சேர்வதோடு இந்த படம் முடிந்திருக்கும்.

இயக்குனர் அகத்தியன் ஒரு பேட்டியில் முதலில் படத்தின் கிளைமாக்சில் காதலர்கள் இருவரும் சேராமல் அப்படியே பிரிவது போல் தான் எழுதி இருந்தேன் என்றும், படத்தின் தயாரிப்பாளர் எனக்கு பாசிட்டிவான முடிவு தான் வேண்டுமென்று அடம்பிடித்ததாலேயே இறுதியில் இருவரும் இணைவது போல் மாற்றப்பட்டது என்றும் சொல்லி இருக்கிறார். ஒருவேளை இருவரும் பிரிவது போல் எடுத்திருந்தால் படம் ப்ளாப் ஆகி இருக்கக் கூட வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்று அகத்தியன் சொல்லி இருக்கிறார்.