சர்தார் பட ரிலீஸுக்கு வந்த திடீர் சிக்கல்.. பதறிப்போய் பெரிய இடத்திற்கு ஓடிய தயாரிப்பாளர்

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராசி கண்ணா, லைலா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தற்போது ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது இந்த படத்தை லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இவர் தான் கார்த்தியின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தேவ் திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தயாரிப்பாளரிடம் சென்று தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதித்து 5 கோடி ரூபாய் இழப்பீடாக தருவதற்கு முன் வந்திருக்கிறார்.

ஆனால் அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த இழப்பீடு பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் சேர்ந்து தற்போது சர்தார் திரைப்பட ரிலீசில் பிரச்சனை செய்வதற்கு முடிவெடுத்து உள்ளார்களாம்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தற்போது உதயநிதி ஸ்டாலினிடம் இந்த பிரச்சனையை கொண்டு செல்ல இருக்கிறார். சமீப காலமாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வரும் உதயநிதி ஸ்டாலின் இந்த சர்தார் திரைப்படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி இருக்கிறார்.

அதனால் தான் தயாரிப்பாளர் அவரிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்றால் சுமூகமாக முடித்து வைப்பார் என்று நினைத்துள்ளார். அதன்படி இந்த பிரச்சனை உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கும் சென்று இருக்கிறது. ஆனாலும் விநியோகஸ்தர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கான இழப்பீடு பணம் வந்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்களாம். அதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம் என்று கூறுகின்றனர்.