கங்கை அமரனை பற்றி தெரியாத விஷயம்.. அண்ணனின் புகழ் வெளிச்சத்தில் மங்கிய மகா கலைஞன்

Ilayaraja – Gangai amaran: பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என ஒரு பழமொழி உண்டு. பெரியவர்களுடன், புகழுடையவர்களுடன் சேர்ந்தால் நாமும் அவர்களை போல் இருக்கலாம் என்ற உதாரணத்திற்கு தான் இந்த பழமொழி. ஆனால் சில நேரங்களில் நம்மை விட அதிக புகழுடைய ஒருவருடன் சேரும் பொழுது, நம்முடைய திறமை வெளியில் தெரியாமல் அப்படியே முடங்கிவிடும். இதற்கு பெரிய எடுத்துக்காட்டு தான் இசைஞானியின் தம்பி கங்கை அமரன்.

கங்கை அமரனை பற்றி இப்போதைய தலைமுறைகளுக்கு தெரிந்ததெல்லாம் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜியின் அப்பா, இசைஞானி இளையராஜாவின் தம்பி என்று தான். அவர் பேட்டியில் டென்ஷன் ஆகி கத்துவதும், பாடல் பாடுவதைப் போலவும் மிமிக்ரி செய்து கிண்டல் அடித்து வருகிறார்கள். உண்மையில் கங்கை அமரன் ஒரு உன்னதமான கலைஞன்.

கங்கை அமரன் இயக்குனராக 19 படங்களை இயக்கியிருக்கிறார். இதில் பாதி படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தவை. தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத இடம் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்திற்கு உண்டு. இது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இதில் சுவரில்லாத சித்திரங்கள் மற்றும் மௌன கீதங்கள் போன்ற படத்தின் மியூசிக் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவை.

கங்கை அமரன் கிட்டதட்ட 30 படங்களுக்கு மேல் பாடலாசிரியராக பணியாற்றியிருக்கிறார். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு பாடல் ஆசிரியராக இவர் தான் இருந்திருக்கிறார். இன்று வரை கொண்டாடப்படும் செந்தூரப்பூவே, காற்றில் எந்தன் கீதம், பூவரசம் பூத்தாச்சு, ராமன் ஆண்டாளும் ராவண ஆண்டாளும், போன்ற எவர்கிரீன் ஹிட் பாடல்கள் மட்டுமில்லாமல் ஜல்சா பண்ணுங்கடா, விளையாட்டு மங்காத்தா போன்ற நவ நாகரீக பாடல்களையும் இவர் எழுதி இருக்கிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் அவருக்கு கங்கை அமரன் தான் டப்பிங் கொடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல் நிறைய படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இவ்வளவு திறமை இருந்தும், எப்பொழுதுமே தன்னை எதுவுமே தெரியாதது போலவும், இளையராஜாவிடம் இருந்து எல்லாத்தையும் கற்றுக் கொண்டது போலவுமே காட்டிக் கொள்வார். இதுதான் அவருடைய திறமை வெளியில் தெரியாமல் போனதற்கு பெரிய காரணம்.

இளையராஜா இசையமைத்து விட்டு வேண்டாம் என்று போட்ட மெட்டுக்களை எடுத்துத்தான் இவர் பாடல் அமைப்பதாக ஒரு சில படங்களின் டைட்டில் கார்டுகளில் விளையாட்டாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் கங்கை அமரன், இளையராஜாவை விட நல்ல திறமையுள்ள கலைஞர் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இளையராஜா என்ற பெரிய பிம்பத்தை தாண்டி, கங்கை அமரனின் திறமை கண்டுகொள்ளப்படாமல் இருந்துவிட்டது.