Actor Prabhas: நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய ஹீரோவாக மாறினார். பாகுபலியின் மிகப் பிரமாண்டமான வெற்றியினால் தயாரிப்பாளர்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் பிரபாஸை நம்பி படம் எடுத்தார்கள். ஆனால் பாகுபலிக்கு பின் வெளியான சாகோ, ராதேஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் திரைப்படங்கள் தொடர் தோல்வியை தான் சந்தித்திருக்கின்றன. தற்போது பிரபாஸின் கைவசம் அடுத்து அடுத்து நான்கு படங்கள் காத்திருக்கின்றன.
சலார்: பிரித்விராஜ், ஜெகபதி பாபு போன்ற முக்கிய நடிகர்களுடன் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். தொடர் தோல்விகளை கொடுத்து வரும் பிரபாஸுக்கு இது கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என அவருடைய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் வரும் செப்டம்பர் மாத இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மட்டும் பத்து கோடி செலவழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ப்ராஜெக்ட் கே: ப்ராஜெக்ட் கே என அழைக்கப்படும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்கள். உலகநாயகன் கமலஹாசனை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சனை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடியாகும்.
ராஜா டீலக்ஸ்: பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ரொம்ப சீரியஸான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரபாஸ், ஒரு மாற்றத்திற்காக நடிக்கும் காமெடி திரைப்படம் தான் ராஜா டீலக்ஸ். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகைகள் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகன் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
ஸ்பிரிட்: சலார், ப்ராஜெக்ட் கே, ராஜா டீலக்ஸ் படங்கள் முடிந்த கையோடு பிரபாஸ் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் ஸ்பிரிட். இந்த படத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் படபிடிப்பானது வரும் நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு படங்களில் பிரசாந்த் நீல் இயக்கிக் கொண்டிருக்கும் சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் மீது பிரபாஸ் மட்டுமில்லாமல் அது அவருடைய ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றால் இனி அவருடைய சினிமா கேரியர் என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.