Kamal, Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தின் வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இதுவரை அவரது படம் இப்படி வசூல் சாதனை படைத்ததில்லை. அந்த அளவுக்கு வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை வளர்த்து விட்டுள்ளார்.
அந்த வகையில் ரஜினி மற்றும் கமல் இருவருமே பாரதிராஜா படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் கமலுடன் நான்கு படங்களில் பணியாற்றிய நிலையில், ரஜினிக்கு இரண்டு படங்கள் வாய்ப்பு கொடுத்து இருந்தார். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். அதாவது கமல், ரஜினி இருவரையுமே வைத்து பாரதிராஜா இயக்கிய படம் தான் 16 வயதினிலே.
இந்த படத்தில் சப்பானியாக கமல், மயிலாக ஸ்ரீதேவி, பரட்டையாக ரஜினி அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து கமலை கதாநாயகனாக வைத்து பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி போன்ற படங்களை எடுத்திருந்தார்.
இந்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்ததாக கமலுடன் பாரதிராஜா கூட்டணி போட்டிருந்தார். ஆனால் ரஜினிக்கு 16 வயதினிலே படத்திற்கு பிறகு கொடி பறக்குது என்ற படத்தை மட்டும் தான் பாரதிராஜா கொடுத்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு போகாமல் மோசமான தோல்வியை அடைந்தது.
இதனால் ரஜினியை வைத்து அடுத்தடுத்த படங்களை எடுக்க பாரதிராஜா முன் வரவில்லை. அதன் பிறகு ரஜினி வேறு இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுவிட்டார். மேலும் இன்றளவும் அவரது பரட்டை கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.
அதுமட்டுமின்றி ரஜினியே பலமுறை பாரதிராஜாவை பற்றி மேடையில் பெருமையாக பேசி இருக்கிறார். மேலும் 16 வயதினிலே படத்தில் தனக்கு 500 ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டும் தற்போது வரை பாரதிராஜா அதைக் கொடுக்கவில்லை என்றும் வேடிக்கையுடன் ரஜினி கூறியிருக்கிறார்.