51வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. கடைசியில் வடசென்னை ரசிகர்களுக்கு கொடுத்த கல்தா

Dhanush – D51: நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தன்னுடைய ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அட்ராங்கி ரே படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைந்து பாலிவுட்டில் ஒரு படம் பண்ணுவதற்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று அறிவிப்புகளும் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக 51 வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். தனுஷ் வாத்தி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைய இருக்கிறார். தேசிய விருது நாயகனாக இருக்கும் இவர், தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிய இருக்கிறார். படத்தின் கான்செப்ட் போஸ்டர் அவருடைய பிறந்த நாளான இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழு நேற்று D51 என்னும் பெயரிடப்படாத தனுஷின் படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா, LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில், பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

படக்குழு வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் மும்பை தாராவி பகுதியின் பேக்ரவுண்ட் காட்டப்பட்டிருக்கிறது. இதனால் நடிகர் தனுஷ் இந்த படத்தில் தாராவி அரசியலை மையமாகக் கொண்டு நடிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்து இந்த படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டமாக புது பட அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்தாலும், அவர்கள் எதிர்பார்த்தது இது கிடையாது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முனைப்பில் இறங்கிவிட்டார். மேலும் அவருடைய இயக்கத்தில், சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இது எல்லாம் முடித்துவிட்டு தான் அவரால் வடசென்னை படத்தை தொடங்க முடியும். தனுஷ் இந்த நேரத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை நடித்து முடித்து விட பிளான் பண்ணி இருக்கிறாரா, அல்லது வட சென்னை 2 வர வாய்ப்பே இல்லையா என இனிவரும் காலங்களில் தான் தெரியும்.