பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகும் அடுத்த வரலாற்று படம்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த மணிரத்னம்

சமீப காலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் வரலாற்று படங்களுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய இயக்குனர்கள் தற்போது வரலாற்று கதைகளை படமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் ராஜமவுலி மற்றும் மணிரத்னம் தான். வரலாற்று படங்கள் எடுத்து இவர்கள் பெற்று வெற்றி தான் இன்று இந்திய சினிமா உலகையே இது போன்ற படங்கள் எடுக்க தூண்டி இருக்கிறது.

தற்போது சினிமா ரசிகர்களும் ஒவ்வொரு வரலாற்று படங்கள் அப்டேட் ஆகும் பொழுது அந்த கதைகளை படிக்க தொடங்கி விடுகின்றனர். அப்படி மீண்டும் ட்ரெண்டான வரலாற்று நாவல் தான் பொன்னியின் செல்வன். தமிழகத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் அதிகம். இந்த கதை படமாக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன் அதைத் தேடிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. முதல் பாகத்தின் ரிலீஸ் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட கோலாகலமாக நடைபெற்றது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பட குழு சோழர்களின் பயணம் என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர். இதில் அவ்வப்போது இயக்குனர் மணிரத்தினமும் கலந்து கொள்கிறார்.

அப்படி அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை நீங்கள் படமாக்குவீர்களா என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு மணிரத்தினம் சிரித்துக் கொண்டே அந்த கதையை என்னுடைய நண்பர் ஷங்கர் இயக்க இருக்கிறார் என்று பதிலளித்திருக்கிறார். மேலும் தானும் இதற்கடுத்து வரலாற்று படங்களை எடுக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் வேள்பாரி கதையை படமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மணிரத்தினம் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் கமலஹாசனின் இந்தியன் 2 மற்றும் தெலுங்கு படமான ஆர்சி 15 படங்களை ஒரே நேரத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு வேள்பாரி கதையே படமாக்கும் வேலைகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேள்பாரி கதை தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னனான பாரியை பற்றியது. இது கதை வடிவில் இருக்கும் போதே வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வரலாற்று புதினம். இந்த படத்தில் பாரி மன்னனின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இயக்குனர் ஷங்கர் விரைவில் இந்த படத்தின் அப்டேட்டை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.