Dhruv Vikram- Mari Selvaraj: இந்திய சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களாக பயோபிக் படங்களுக்கு என்று மவுசு கொஞ்சம் அதிகமாகி விட்டது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல துறைகளிலும் முன்னணியில் இருந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக இயக்குவதில் இயக்குனர்கள் முனைப்பு காட்டி வருகின்றன. சமீபத்தில் தமிழக விளையாட்டு வீரர் நட்ராஜ் வாழ்க்கை வரலாறு கூட படமாக எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து ஒரு பயோபிக் படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். மாமன்னன் முடித்த கையோடு இந்த படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. மேலும் துருவ் இந்த படத்திற்காக தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூட சமீபத்தில் செய்திகள் வந்தன.
தற்போது இந்த படம் சம்பந்தப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் கபடி சீருடையில் ரொம்பவும் கரடு முரடான முகத்தோற்றம் மற்றும் உடல் தோற்றத்தோடு இருக்கும் புகைப்படம் தான் அது. ஏற்கனவே துருவ் இந்த படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த போஸ்டர் மூலம் இது உறுதியாகி இருக்கிறது.
மேலும் தமிழக கபடி விளையாட்டு வீரர் ஒருவரது வாழ்க்கை கதையில் இவர் நடிக்க இருக்கிறார். இதற்காகத்தான் கடுமையான பயிற்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுதே இது வழக்கமான மாரி செல்வராஜின் தென் மாவட்ட பகுதியை சார்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்பதும் ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.
கடும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மாமன்னன் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் முழுக்க முழுக்க துருவ் விக்ரமின் படத்தில் கவனம் செலுத்தப் போகிறார். படப்பிடிப்பு வேலைகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டரை பார்க்கும் பொழுதே துருவ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என தெரிகிறது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் வைரல் போஸ்டர்

தமிழக கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை கதை படமாக போகிறது என்று உறுதியாக இருக்கும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தான் தெரிவிக்க வேண்டும். சீயான் விக்ரமிற்கு பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் கிடைத்தது போல், தற்போது அவருடைய மகன் துருவிற்கு இந்த படம் கிடைத்திருக்கிறது.