அப்பாவின் மரணத்தில் தேவையில்லாமல் புரளியை கிளப்ப வேண்டாம்.. மயில்சாமியின் மகன் ஆவேசம்

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த மயில்சாமி சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடும் அதிர்வலையை ஏற்படுத்திய அந்த மரணத்திற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்தனர்.

மேலும் ரஜினி உட்பட பல நட்சத்திர பிரபலங்களும் நேரில் வந்து மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தற்போது அவருடைய இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில் மயில்சாமியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பதை பற்றி அவருடைய மகன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சிவராத்திரி தினமான அன்று மயில்சாமி தன் மனைவி மற்றும் மகனுடன் கேளம்பாக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வடபழனி கோவிலுக்கும் சென்று விட்டு வீடு திரும்பி இருக்கிறார். சிவராத்திரி என்பதாலும் அதிகாலை நேரம் என்பதாலும் அவர் தூங்காமல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் டிவி பார்த்தபடி இருந்திருக்கிறார்.

அப்போது திடீரென அவருக்கு உடலில் சிறு அசௌகரியம் ஏற்பட்டதால் தன் மகனிடம் அது குறித்து கூறியிருக்கிறார். மேலும் சிறிது நேரத்திலேயே அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய மகன் மயில்சாமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. இருப்பினும் அவர் மயக்கத்தில் இருப்பதாக நினைத்து அவருடைய மகன் மருத்துவமனைக்கு தூக்கி சென்று இருக்கிறார்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனாலும் அவருடைய மகன் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கும் அவருடைய இறப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தான் விஷயம் மீடியாவுக்கு தெரிய வந்துள்ளது. இதுதான் தன் அப்பாவின் கடைசி நிமிடங்கள் என அவருடைய மகன் அன்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும் தன் அப்பாவின் இறப்பை பற்றி எதுவும் தெரியாமல் தேவையில்லாத விஷயங்கள் ஊடகங்களில் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் சில யூடியூப் சேனல்கள் மயில்சாமியின் இறப்பு குறித்து தேவையில்லாத புரளியை கிளப்புகிறார்கள் என்றும் அவர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மயில்சாமியின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிவந்துள்ள இந்த செய்தி ரசிகர்களின் மனதை கனக்க வைத்துள்ளது.