100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நடிகர்களில் முதன்மையானவராக இருப்பவர் தான் ரஜினி. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமையும் இவருக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த படத்தின் வியாபாரமும் பட பூஜையின் போதே களைகட்ட தொடங்கி விடும்.
இப்போது விஜய், அஜித் போன்ற நடிகர்கள் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் இதற்கு முன்பே அதிகபட்ச சம்பளம் வாங்கி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் மட்டும்தான். இப்படி நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு சில காலங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் படத்தின் லாபத்தையும் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்தனர்.
இப்படி புகழின் உச்சாணி கொம்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் சம்பளம் வாங்கவில்லை. அதிலும் ஒரு படத்தில் இவரை விட ஹீரோயினுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதாவது 1976 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மூன்று முடிச்சு.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் ரஜினி, கமல் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். அப்படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு அப்போது 2000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அவரை விட அதிகமாக ஸ்ரீதேவி 5000 ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதே போன்று கமலுக்கும் 30,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் ரஜினி அப்போதுதான் திரையுலகில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். மேலும் இந்த படத்திற்கு முன்பாக தமிழில் அவர் நடிப்பில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மட்டும் தான் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் அவருக்கு முன்பே ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் என்பதால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்த சூப்பர் ஸ்டார் அதன் பிறகு நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடிக்க ஆரம்பித்தார். அது மட்டும் அல்லாமல் அவருடைய திரைப்படங்களும் வரிசையாக சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் அவருக்கான சம்பளமும் அவர் கேட்காமலேயே பல மடங்கு உயர்ந்தது. இவ்வாறு சிறிது சிறிதாக முன்னேறிய சூப்பர் ஸ்டார் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார்.