உலகநாயகன் கமல்ஹாசன் 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான கமலஹாசன், தொடர்ந்து 80 களின் கனவு கண்ணனாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் வலம் வந்தார்.
தற்போது உலக நாயகனாக உருவாகியுள்ள கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க வந்த 8 வருடத்திலேயே 100 திரைப்படங்களில் நடித்து முடித்தார். அதில் 1981 ஆம் வருடம் தனது நூறாவது திரைப்படமான ராஜபார்வை என்ற திரைப்படத்தை கமல்ஹாசன் தானே கதை எழுதி நடித்தார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தனது அண்ணன் சாருஹாசனுடன் ஹஸன் ப்ரொதர்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்தார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ராஜ பார்வை திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து நடித்தார். இயக்குனர் சங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இத்திரைப்படத்தை இயக்கிய நிலையில், இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். மாதவி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தில் காதல் கதையை மையமாக வைத்து படத்தின் கதை நகரும்.
கமல்ஹாசன் கண் தெரியாத மாற்றுத்திறனாளியாக இத்திரைப்படத்தில் நடித்திருப்பார். கிறிஸ்தவ பெண்ணான மாதவியை காதலித்து வரும் கமல்ஹாசன் பல இன்னல்களை தாண்டி அவரை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதையாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் அமாவசைய சந்துருடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இதனிடையே இத்திரைப்படம் அந்தாண்டு கமல்ஹாசனுக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். கமலின் கண் தெரியாத நடிப்பு பேசப்பட்டாலும், படத்தின் கதையில் தொய்வு இருந்ததால்,படம் வெற்றிப் பெறவில்லை . இதனிடையே தான் தயாரித்த முதல் திரைப்படமே தோல்வியடைந்ததால் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை கிட்டத்தட்ட 5 வருடங்கள் இழுத்து மூடி வைத்தார்.
பல லட்ச ரூபாய்கள் நஷ்டம் அடைந்ததையடுத்து, கடனை அடைக்க பெரும்பாடுப்பட்டார் கமலஹாசன். அதன் பின்னர் 1986ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை ராஜ் கமல் இன்டர்நேஷனல் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு புது பெயரை மாற்றி அப்படத்தை தயாரித்து வெற்றியும் அடைந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்தே தேவர்மகன், அபூர்வ சகோதர்கள் என இன்றுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கமல்ஹாசன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.