களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் அந்த ஒரு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதன் பிறகு பருவ வயதில் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் அவர் நடிப்பு தனக்கு கை கொடுக்காது என்று நினைத்து வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்தார்.
அந்த வகையில் அவர் தன்னுடைய பிழைப்புக்காக தேர்ந்தெடுத்த பாதை தான் நடனம். ஒரு நடன இயக்குனரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்த அவர் நன்றாக டான்ஸ் ஆட கற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் சில திரைப்படங்களுக்கு கோரியோகிராபராகவும் பணியாற்றி இருக்கிறார். இவ்வாறு அவருடைய வாழ்வு டான்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறது.
ஆனால் அவருக்குள் இருந்த உலக நாயகனை நடிகர் ஜெய்சங்கர் தான் தட்டி எழுப்பி இருக்கிறார். அதாவது கமல் ஒரு முறை ஜெய்சங்கர் படத்திற்கு நடனம் அமைத்திருக்கிறார். அப்போது அவரைப் பார்த்த ஜெய்சங்கர் ஏன் இப்போதெல்லாம் நடிப்பதில்லை, எதற்காக நடிப்பை விட்டு விட்டாய் என்று கேட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
வெறும் பேச்சோடு அதை விட்டு விடாமல் அந்த படத்திற்காக கமல் நடனமாடிய காட்சியையும் அவர் படத்தோடு சேர்த்து இருக்கிறார். இதன் மூலம் கமலுக்கு மீண்டும் நடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அவரை உருவாக்கி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு கமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படி ஆரம்பித்த அவருடைய நடிப்பு பயணம் அதன் பிறகு கமலை பிசியான நடிகராக மாற்றி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல முன்னணி இயக்குனர்கள் படத்திலும் நடித்து அவர் தன்னுடைய திறமையை நிரூபித்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகமாக நடித்திருக்கும் கமல் பிறகு தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவ்வாறு திரைத்துறையில் விஸ்வரூபம் எடுத்த அவருடைய வளர்ச்சி தற்போது விக்ரம் திரைப்படம் வரை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பலரையும் வியக்க வைத்த அந்த திரைப்படத்தின் மூலம் கமல் தற்போது மீண்டும் பிஸியான நடிகராக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ்சை வெற்றிகரமாக தொடர்ந்துள்ளார்.