42 வருடங்களுக்கு முன்பே மாடர்ன் ரொமான்டிக்காக நடித்த கமல்.. 100வது படத்தில் விழுந்த மரண அடி

Actor Kamal: காதல் நாயகன், ரொமான்டிக் மன்னன் என பல பெயர்கள் கமலுக்கு உண்டு. ஏனென்றால் இவருடைய படங்களில் சமூக கருத்து எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கும். அப்படி 32 வருடங்களுக்கு முன்பே கமல் ரொம்பவும் ரொமான்டிக்காக ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் இப்போதைய ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் குறைவு தான் என்று சொல்லும் அளவுக்கு அப்படம் இருந்தது. அப்படி 80 காலகட்டத்திலேயே வெளிவந்த அந்த படம் கமலுக்கு மிகப்பெரும் மரண அடியை கொடுத்து அவரை கடனாளியாக மாற்றியது.

அப்படம் தான் கமலுடைய நூறாவது படமாக வெளிவந்த ராஜபார்வை. அன்றைய காலகட்டத்தில் கமல் உடைய அண்ணன் தான் அவருக்கான கதையை தேர்ந்தெடுப்பார். அண்ணன் சொல்லிவிட்டால் போதும் அதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை என்பதற்கு ஏற்ப கமல் அப்படங்களில் நடித்துக் கொடுத்து விடுவார்.

அந்த வகையில் கமல் தன் அண்ணன்களுடன் சேர்ந்து தயாரித்த முதல் படமான ராஜ பார்வை அவருடைய நூறாவது படமாக இருந்தது. சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமலுடன் மாதவி இணைந்து நடித்த படம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அப்படத்தின் கதையை கமல், பாலகுமாரன் உட்பட நான்கு பேர் எழுதியிருந்தார்கள். ஒரு பார்வையற்ற வயலின் கலைஞரின் காதல் கதை தான் இப்படத்தின் மையக்கரு. மேலும் கலை இயக்குனர் தோட்டா தரணியின் அறிமுகமும் இப்படத்தில் தான். அது மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் உருவானது.

இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இதன் காரணமாகவே கமல் பல வருடங்கள் கடன் சுமைக்கும் ஆளானார். இப்படத்திற்குப் பிறகு சில வருடங்கள் எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்த அவர் விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.