தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஏற்கனவே களத்தில் இறங்கி சிறப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊர் மக்கள் அவரவர்களின் வேட்பாளர்கள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.
இதில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக பிரச்சாரம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டிலேயே பிஸியாக இருந்ததால், கட்சி வேலைப்பாடுகளில் சரிவர ஈடுபட இயலவில்லை. தற்போது அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தனது கட்சிக்காக இன்று தான் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்.
இவரின் வருகையால் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தனது படப்பிடிப்புக்கான நேரம், பிக்பாஸிற்கான கால்ஷீட் இதற்கு மத்தியில் தற்போது இந்த தேர்தல் வேலைப்பாடுகள், இவை அனைத்தையும் எந்த அளவிற்கு சிறப்பாக செய்து முடிப்பார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
வருகின்ற ஊராட்சி மன்ற தேர்தலுக்காக தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன் முதல் நாளான இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் தனது அடுத்த பிரச்சாரத்தை வரும் 30 ஆம் தேதி அன்று மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது எதிர்க்கட்சி நிகழ்த்திவரும் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் மக்கள் நீதி மையம் தனது பங்கை சரிவர அளித்து வருகிறது என்பதை தனது பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக குறிப்பிட்டுள்ளார் கமலஹாசன்.