பொதுவாக ஒரு படம் தோல்வி அடைந்தால், அந்த படத்தில் நடித்தவர்கள் சின்ன ஹீரோக்களாக இருந்தால் கூட தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் படத்தின் தோல்வியை பகிரங்கமாக மேடையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு பாலிவுட், மோலிவுட், டோலிவுட் திரையுலகங்கள் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய ஹீரோக்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய படத்தின் தோல்வியை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவருடைய மகன் ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், சோனு சூட், கிஷோர் குமார், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இதுபற்றி பேசிய நடிகர் சிரஞ்சீவி, ஆச்சார்யா படத்தின் தோல்வியை தானும், ராமச்சரனும் ஒப்புக்கொள்வதாகவும், படத்தின் தோல்விக்கு தானே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும், இதில் தனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் படத்தின் கண்டன்ட் சரியில்லை என்றால் எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களும் ரிஜெக்ட் செய்யப்படும் என்பதற்கு தன்னுடைய படமே சாட்சி என்றும் கூறினார். படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று நானும், ராம் சரணும் எங்களது சம்பளத்தில் 80 சதவீதத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.
சிரஞ்சீவியின் இந்த செயலை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். சிரஞ்சீவி தற்போது லூசிபர் என்னும் மலையாள திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சல்மான்கான் மற்றும் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.