கழுத்தை நெரித்த கடன், காப்பாற்றி விட்ட தயாரிப்பாளர்.. நன்றி கடனுக்காக சம்மதித்த சிவகார்த்திகேயன்

தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே அவர் ஏகப்பட்ட கடன் பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தார். அதனாலேயே அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அது மட்டுமல்லாமல் இந்த கடனுக்காக அவருடைய இசிஆர் பங்களாவை கூட விற்கும் நிலைக்கு வந்தார்.

அப்போதுதான் லைக்கா நிறுவனம் சிவகார்த்திகேயனின் கடனை அடைக்க முன் வந்தது. அதற்கு பதிலாக ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டது. அதாவது சிவகார்த்திகேயன் வருடத்திற்கு ஒருமுறை லைக்காவின் தயாரிப்பில் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

சிவகார்த்திகேயனும் அதற்கு சம்மதிக்கவே தற்போது அவருடைய அனைத்து கடன் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் படம் உருவானாலும் அதற்கு பின்னணியில் லைக்கா நிறுவனத்தின் பங்கும் இருப்பது போன்று ஒரு அக்ரீமெண்ட் போடப்பட்டிருக்கிறது.

கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தை கூட லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தான் தயாரித்திருந்தனர். அதேதான் அடுத்தடுத்த படங்களுக்கும் அவர்கள் ஃபாலோ செய்ய இருக்கிறார்களாம். இதுதான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக லைக்கா நிறுவனம் விஷாலின் கடனை அடைப்பதாக பேசி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அதை விஷால் பின்பற்றாததால் தற்போது அவர் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி இல்லாமல் தன்னுடைய நன்றி கடனை வேறு மாதிரி திருப்பி செலுத்திக் கொண்டிருக்கிறார்.