தளபதி விஜய் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி ஏற்கனவே தமிழில் நடிகர் கார்த்தி மற்றும் நாகர்ஜூனாவை வைத்து தோழா படத்தை இயக்கியவர். இந்த படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் சூடு பிடிக்க வரும் பொங்கலன்று வாரிசு ரிலீஸ் என அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில் அஜித்தின் துணிவு பட ரிலீஸ், உதயநிதியின் தலையீடு, தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல், தெலுங்கில் ரிலீசாவதில் ஏற்பட்ட குளறுபடி என வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என கடந்த சில தினங்களாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. விஜய் படத்தின் ரிலீசுக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதைவிட பலமடங்கு எதிர்பார்ப்பு அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் தளபதியின் மாஸ் பேச்சு தான்.
எப்போதுமே சைலன்ட் மோடில் இருக்கும் விஜய் ஆடியோ வெளியீட்டு விழாவை தன்னுடைய எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் மேடையாக மாற்றியது சர்க்கார் படத்திலிருந்து தான். அதற்கடுத்து பிகில், மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் எல்லாம் இவருடைய பேச்சில் அனல் பறந்தது என்றே சொல்லலாம். அவருடைய ரசிகர்களே இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.
இந்த மேடைகளில் அரசியல் பேசுவதையும், ஒரு குட்டிக் கதை சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். ஆனால் கடந்த ஆடியோ லாஞ்சின் போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி என்பதால் விஜயால் ரொம்பவும் எளிதாக அரசியல் பேச முடிந்தது. இப்போது திமுக ஆட்சி என்பதால் அவர் அரசியல் பேசுவாரா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்.
இருந்தாலும் வாரிசு ரிலீஸ் தேதியில் ஏதாவது பிரச்சனை என்றால் விஜய் கண்டிப்பாக அரசியல் பேசுவார். மேலும் இந்த முறை எட்டு வருடங்களுக்கு பின் விஜய்-அஜித் படங்கள் மோதுவதால் அவர் இதைப்பற்றி பேசுவார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே ரஞ்சிதமே பாடல் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த பாடல்களின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.