Actress Silk: ஒரு நடிகை இறந்து பல ஆண்டுகள் கழித்தும் இன்னும் ரசிகர்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அது சில்க்கால் மட்டும்தான் முடியும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து திரையுலகையும் தன் கட்டுக்குள் வைத்திருந்த இவர் முன்னணி நடிகை எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்து நின்றார்.
இன்னும் சொல்லப்போனால் ரஜினி கமல் போன்ற டாப் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நடிகையும் இவர் தான். இவர் இல்லாமல் எந்த படங்களும் வெளிவராது என்று சொல்லும் அளவுக்கு படு பிஸியாக நடித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது இன்று வரை நம்ப முடியாத விஷயமாகவே இருக்கிறது.
தற்போது இவருடைய மரணம் குறித்து பல விஷயங்கள் விவாதமாக மாறி இருந்தாலும் சில்க் தன்னுடைய இறப்பிற்கு முன்னர் என் சாவுக்கு நீ வருவியா என்று ஒரு நடிகரிடம் தான் கேட்டிருக்கிறார். அதாவது அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சுபாஷ் என்ற படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அந்தப் பாடலின் இறுதியில் சில்க் அந்த நெருப்பில் மறைவது போன்று காட்டப்படும்.
அதாவது அவர் இறந்து விடுவதாக நாம் புரிந்து கொள்ளும் வகையில் அந்த காட்சி இருக்கும். அப்போது அந்த படப்பிடிப்பில் சில்க் அர்ஜுனிடம் ஒரு வேலை நான் இறந்துவிட்டால் நீ என்னுடைய சாவுக்கு வருவியா என்று கேட்டிருக்கிறார். இதனால் பதறிப்போன அர்ஜுன் ஏன் இப்படி பேசுற என்று கடிந்து கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு அந்த படம் முடிந்து வெளியான இரண்டே நாளில் தற்கொலை செய்து கொண்டார். அந்த வகையில் செப்டம்பர் 21 1996 ஆம் ஆண்டு சுபாஷ் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதி சில்க் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது மட்டுமல்லாமல் அர்ஜுனை ரொம்பவே வேதனைப்படுத்தி இருக்கிறது.
அதை தொடர்ந்து சில்க்கின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவர் ஒருவர் மட்டும்தான் அந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டாராம். தங்களுடைய படங்களில் சில்க் ஒரு பாடலுக்காவது ஆடி விட மாட்டாரா என்று பல நடிகர்களும் போட்டி போட்டு வந்த நிலையில் அவருடைய மரணத்திற்கு எந்த நடிகரும் வராதது வேதனைக்குரிய விஷயம் தான்.