தற்போது எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய பேச்சு தான். கார்த்திக், திரிஷா, விக்ரம் ஆகியோர் பல இடங்களுக்கு சென்று பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரமோஷன் செய்து வருகிறார்கள். மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மணிரத்தினம் இயக்கியுள்ள இந்த பொன்னியின் செல்வன் படம் வருகின்ற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கார்த்தி ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தபோது அவருடைய முந்தைய படங்களை பற்றி பேசி இருந்தார். அதில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் முழு கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவம் தான். கைதி படத்தில் பாடல், ஹீரோயின் என எதுவுமே கிடையாது.
ஆனால் தனது திரைக்கதை மூலம் ரசிகர்களை படத்தின் இறுதி வரை விறுவிறுப்பாக பார்க்கச் செய்திருந்தால் லோகேஷ் கனகராஜ். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் மேடையில் கார்த்தியிடம் கைதி 2 படம் எப்போது வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கண்டிப்பாக படம் வரும் என உறுதி அளித்து கைதி 2 படத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் தளபதி 67 பட வேளையில் பிஸியாக உள்ளார். இதனால் அப்படத்தின் பிரிப் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்த பிறகு தான் கைதி 2 படப்பிடிப்பு தொடங்கும். இதனால் அடுத்த ஆண்டு 2023இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும் கைதி படத்தை விட பத்து மடங்கு அதிகமான பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக கார்த்தி கூறியுள்ளார். இதனால் கண்டிப்பாக படத்தில் பிரம்மாண்டம் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் டில்லி, ரோலக்ஸ் இருவருமே கைதி 2 படத்தில் மோத உள்ளதாக கார்த்தி கூறியுள்ளார்.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் சினிமாவில் பல வருடங்களாக கார்த்தி, சூர்யா இருந்தாலும் ஒரே படத்தில் இணைந்து நடித்ததில்லை. அதுவும் லோகேஷுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் தரமான சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.