ஒரே நேரத்தில் ரெட்டை சவாரி செய்த ஜெயிலர் வர்மன்.. யாரும் அறிந்திடாத விநாயகனின் ஆரம்பம்

Actor Vinayakan: ரஜினியின் ஜெயிலர் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக ரஜினி இதுபோன்ற வெற்றியை சுவைக்காத நிலையில் நெல்சன் தித்திக்கும் படியாக ஜெயிலர் படத்தை கொடுத்திருந்தார். படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகியும் ஆர்ப்பாட்டம் இன்னும் குறையவில்லை.

மேலும் ஜெயிலர் படத்தில் நடித்த எல்லோருக்குமே சரியான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் நெல்சன். அந்த வகையில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என பிரபல நடிகர்கள் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நின்றனர். ஆனால் இவர்களையே ஓரம் கட்டும் அளவிற்கு ஒரு கதாபாத்திரம் நம்மை மிரளச் செய்தது.

அதாவது ஜெயிலரில் வர்மனாக நடித்த விநாயகன் தான். படத்தில் ரெட்டை சவாரி செய்வது போல தான் இவரது கதாபாத்திரம். அதாவது நகைச்சுவையாகவே பேசி வில்லனுக்கு உண்டான தோரணையை கொண்டு வர வேண்டும். அதை நேர்த்தியாக செய்து நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார் விநாயகன்.

அதுவும் மலையாளம் கலந்த இவரது தமிழ் நின்று பேசியது. இவ்வளவு நாள் இப்படி ஒரு நடிகரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் விநாயகனின் ஆரம்பப் புள்ளி யாரும் எதிர்பாத்திடாத ஒன்றுதான். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவராக விநாயகன் இருந்ததால் நடன கலையை கற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பிறகு மலையாளத்தில் மோகன்லாலின் படத்தில் நடனமாடி இருந்தார். சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகன் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய அசாத்தியமான திறமையால் மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார்.

மேலும் தமிழில் திமிரு படத்தின் மூலம் விநாயகன் அறிமுகம் ஆனாலும் ரசிகர்களிடம் அடையாளம் காண வைத்த படம் மரியான் தான். இப்போது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கே வில்லனாக நடித்து அசத்து இருக்கிறார். இப்போது மலையாளத்தை காட்டிலும் தமிழ் சினிமாவில் விநாயகனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.