அந்தப் படத்தில் இருந்து வெளிவராத மணிரத்தினம்.. தக்லைஃப் படம் எப்படி இருக்கு?

கிட்டத்தட்ட 38 வருடங்கள் கழித்து மணிரத்தினம் மற்றும் கமல் அதே மும்பை, அதே பெயர் சக்திவேல் நாயக்கர் என பழசை மறக்காமல் மீண்டும் அந்த கூட்டணியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த படத்தை அமைத்துள்ளனர். தக்லைஃப் படக்கதை மும்பையில் ஆரம்பிக்கிறது.

ஆரம்பத்திலேயே ட்ரெய்லரில் வந்தது போல் கமல் சிம்பு மூலம் தப்பிக்கிறார். இதுதான் படத்தின் ஆரம்ப புள்ளி அதன் பிறகு வழக்கமான கேங்ஸ்டர் கதைதான். அந்தக் கதையில் மணிரத்தினம் எந்த மாதிரி சஸ்பென்ஸ் வைத்திருப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

நாசர் மற்றும் ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேக்கர் இருவரும் எதிர் எதிர் கேங்ஸ்டர்ஸ். இருவருக்குள் நடக்கும் பிரச்சனையில் ஆரம்பிக்கிறது இந்த படம். அதன்பின் முற்றிலுமாக வேறு ஒரு பாதையில் கதையை நகர்த்தியுள்ளார் மணிரத்தினம். சிம்பு மற்றும் கமல் இருவரையும் தவிர படத்தில் எந்த கதாபாத்திரமும் மனதில் படியுமாறு இல்லை.

ஒரு கட்டத்தில் மணிரத்தினத்தில் செக்கச் சிவந்த வானம் படம் கண்முன்னே தெரிகிறது. ஓரளவு கதையை கணித்து விடும் படி காட்சிகள் இருப்பது சற்று சலிப்பு தட்டுகிறது. கேங்ஸ்டர் கதை போல் ஆரம்பித்தாலும் கடைசியில் வந்து நிற்கின்ற இடம் ரங்கராய சக்திவேல் நாயக்கர் பதவிதான்.

செக்கச் சிவந்த வானம் படத்திலும் பிரகாஷ்ராஜின் இடத்திற்கு ஆசைப்பட்டு அண்ணன் தம்பி மூவரும் அடித்துக் கொள்வார்கள். பல இடங்களில் மணிரத்தினம் அந்த படத்தில் இருந்து வெளி வந்தது போல் தெரியவில்லை. மொத்தத்தில் கமல் மற்றும் சிம்புவை பார்த்தால் வரதனையும், எத்தியையும் ஞாபகப்படுத்துகிறது.