தளபதி விஜய்யை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்ற தகவல் நேற்று வரை வதந்தியாக இருந்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக உறுதியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் என ஒரு பிரம்மாண்ட கூட்டணியுடன் விஜய் தன்னுடைய 68வது படத்தில் களம் இறங்க இருக்கிறார். மேலும் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு யுவன் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.
தளபதி 68, மங்காத்தா மற்றும் மாநாடு படங்களை போல் மிகப்பெரிய ஹிட் அடித்து விடும் என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த வருடம் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு பக்கம் லியோ படத்தின் ரிலீஸ் மறுபக்கம் தன்னுடைய அடுத்த படத்தின் வெற்றிக் கூட்டணி என டபுள் ட்ரீட் வைத்திருக்கிறார். நேற்றிலிருந்து தளபதி 68 அப்டேட் இணையதளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது.
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி விஜய் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்தப் புகைப்படம் 10 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டதாக அவர் கொடுத்த அதிர்ச்சி தான் ரசிகர்களை இன்னும் மிரள வைத்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகவே தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போவது உறுதியாக இருக்கிறது.
அறிவிப்புக்கு பின்னர் வெங்கட் பிரபு படத்தை பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசினார். இவர் ஏற்கனவே நடிகர் அஜித்குமாரை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கியிருந்ததால், தளபதி 68 படத்தில் அஜித் நடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு லியோ திரைப்படத்தில் எப்படி என்ன நடக்கும், யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாத அளவு இருக்கிறது அதேபோன்றுதான் இந்த படமும் என்று சூசகமாக பதிலளித்திருக்கிறார்.
ஒருவேளை நட்பு ரீதியாக அஜித்குமார் இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் மட்டும் நடந்தால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மிரண்டு போய்விடும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தளபதி விஜய்க்கு இந்த கதை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாகவும் வெங்கட் பிரபு சொல்லி இருக்கிறார்.
இந்தப் படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்க்கு 150 கோடி சம்பளமாக பேசியிருக்கிறது. லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய், வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். குறுகிய காலத்திலேயே இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.