சிறப்பு கட்டுரைகள்

பும்ராவை பற்றி புட்டு புட்டு வைக்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு விழுகிற பலத்த அடி

By Thenmozhi · 01 ஜூலை 2025 · Updated 07 மார்ச் 2026
England-Bumrah

இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது இந்தியா. போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் கூட 99 சதவீதம் இந்தியாவின் கையில் தான் இந்த மேட்ச் இருந்தது. ஆனால் டிரா கூட செய்ய முடியாமல் இங்கிலாந்து வசம் போட்டியை கொடுத்து விட்டனர்.

மேலும் இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை பொருத்தவரை பும்ராவை மட்டுமே மதிக்கிறார்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் 30 ஓவர்களுக்கு மேல் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசுவது கடினம். ஆனால் அப்படி பும்ரா தொடர்ந்து வீசினால் அது அவரது உடல் நிலையை பாதிக்கும்.

ஏற்கனவே பும்ரா தொடர்ந்து விளையாட மாட்டார். அப்படி விளையாடினால் அவருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படும் அதனால் இந்த தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்வார் எனவும் முன்பே தெரிவித்திருந்தனர்.

இப்பொழுது அவர் எந்த போட்டியில் ஓய்வு எடுப்பார் என்பதை இங்கிலாந்து கணித்துள்ளனர். ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார்.

ஏனென்றால் இந்திய அணி 2-0 என்ற கணக்கை விரும்ப மாட்டார்கள். அதனால் அவரை இரண்டாவது போட்டியிலும் விளையாட வைத்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கவே விரும்புவார்கள்.

மூன்றாவது போட்டி உலகப் புகழ் வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. அங்கே விளையாடுவதன் மூலம் தன் பெயரை பலகை பட்டியலில் பதிக்கவே விரும்புவார் பும்ரா, அதனால் அங்கேயும் விளையாடுவார் என கணித்துள்ளனர். இப்படி இந்திய அணி என்னென்ன செய்யும் என்பதை முன்பே பட்டியலிட்டு வருகின்றனர்.