90 களின் காலகட்டத்தில் போலீஸ் படம் என்றாலே அது கேப்டன் விஜயகாந்த்துக்கு தான் பொருத்தமாக இருக்கும். அவர் போலீஸ் ஆக நடித்த கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த சமயத்தில் விஜயகாந்துக்கு போட்டியாக ஆக்சன் கிங் அர்ஜுனும் போலீசாக நிறைய படங்களில் நடித்தார். அப்படி அர்ஜுன் போட்டி போட்டு நடித்த போலீஸ் படங்களை பார்க்கலாம்.
ஜெய்ஹிந்த்: அர்ஜுன் இயக்கி, நடித்த திரைப்படம் ஜெய்ஹிந்த் . இந்த படம் 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் வரும் ‘தாயின் மணிக்கொடி’ பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கிறது. இந்த படத்தில் அர்ஜூனுடன் ரஞ்சிதா,கவுண்டமணி, மனோரமா, செந்தில், மேஜர் சுந்தரராஜன், சாருஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
மருதமலை: இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் மருதமலை. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் வடிவேலு கூட்டணியில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
சங்கர் குரு: அர்ஜுன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சங்கர் குரு. இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. சங்கர் குரு திரைப்படத்தில் நடிகை சாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
சேவகன் : ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்ததால் சேவகன் திரைப்படத்தை அவரே தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தில் குஷ்பூ, கேப்டன் ராஜு, நாசர், ராக்கி, வெண்ணிறாடை மூர்த்தி, செந்தில், சாருஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
குருதிப்புனல்: உலக நாயகன் கமலஹாசனும், ஆக்சன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்த திரைப்படம் குருதிப்புனல். 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன குருதிப்புனல் திரைப்படம் அந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது.
தாயின் மணிக்கொடி: 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாயின் மணிக்கொடி. இந்த படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்தது மட்டுமில்லாமல் படத்தை எழுதி, இயக்கியிருந்தார். தாயின் மணிக்கொடி திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.