அந்த உரிமைகளை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்கும் கமல்.. உலகநாயகன் பதுக்கி வைத்த ரகசியம்

கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் மட்டுமின்றி உலக நாயகன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்து படம் பண்ண இருக்கிறார். மேலும் விக்ரம் 2, தலைவன் இருக்கிறான் போன்ற படங்களும் இருக்கின்றன.

உலக நாயகன் கமலஹாசன், சினிமாவில் அனைத்தையும் கற்றறிந்த ஞானி என்றே சொல்லலாம். சினிமாவின் மீது என்றுமே தீராத காதல் கொண்டவர் இந்த கலைஞன். நடிகர், வசன கர்த்தா, நடன இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்ட கமலஹாசன் அவர்கள், இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

வருமானம் என்பதை தாண்டி கமலுக்கு சினிமா என்பது மிகப்பெரிய லட்சியம். பொதுவாக ஒரு படம் ரிலீசாகி வெற்றிக் கண்ட பின் அந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்று விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும். ஆனால் கமலஹாசன் தன்னுடைய ஒரு படத்தின் உரிமையை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருக்கிறார்.

கமலஹாசன் ஒரே வாரத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி முடித்த திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தை கமல் தயாரிக்க இயக்குனர் பரதன் இயக்கினார். இந்த படத்தில் கமலஹாசன், சிவாஜி, ரேவதி, கௌதமி, நாசர், தலைவாசல் விஜய், வடிவேலு, காந்திமதி, எஸ்.ஏன்.லட்சுமி, சங்கிலி முருகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் கமலின் சினிமா வாழ்க்கையின் கௌரவம் என்றே சொல்லலாம். அந்த வருடத்திற்கான அத்தனை விருதுகளையும் வென்று குவித்தது தேவர் மகன் திரைப்படம். 5 தேசிய விருதுகள், 3 மாநில விருதுகள், 2 பிலிம்பேர் விருதுகளை வென்றது. மேலும் இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டது. மேலும் இந்தப் படம் விரசாத் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்ய்யப்பட்டது.

தன்னுடைய கனவுப் படமான இந்த தேவர் மகன் படத்தின் உரிமையை தான் கமல் இதுவரை யாருக்கும் கொடுக்காமல் பொக்கிஷமாக வைத்திருக்கிறார். இப்போது உருவாக இருக்கும் தலைவன் இருக்கிறான் படம் தேவர் மகனின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தை கமலே இயக்குகிறார்.