சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஹீரோவை எதிர்த்து நிற்கும் வில்லனும் ரொம்ப முக்கியம். வில்லன் எந்த அளவுக்கு மாஸாக இருக்கிறாரோ அதை வைத்து தான் அந்த படத்தில் ஹீரோவுக்கு கெத்து. வில்லன் நடிகர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு எப்பொழுதுமே வேண்டும். அந்த குணாதிசயங்கள் இல்லை என்றால் அவர்கள் வில்லனாக நடிக்க தகுதியற்றவர்கள் என்றே ரசிகர்கள் பார்ப்பார்கள்.
சில படங்களில் டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் நடிப்பார்கள். அது ஏற்றுக்கொள்ளும் படியாகவும் இருக்கும். சில நேரங்களில் இதுபோன்ற எடுக்கும் புதிய முயற்சிகள் சொதப்பல் ஆகிவிடும்.
பாண்டியராஜன்: கன்னிராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் பாண்டியராஜன். பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்த இவர் பின் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். இவரை சாதாரணமாக பார்த்தாலே சிரிப்பு வரும். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஒய் ஜி மகேந்திரன் : ஒய் ஜி மகேந்திரன் நாடக கலைஞர் மற்றும் சினிமா நடிகர். காமெடி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். பல காமெடி காட்சிகளில் புகழ் பெற்ற இவர், சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்த மாநாடு படத்தில் வில்லனாக நடித்தது எடுபடவில்லை.
மாதவன்: மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் மாதவன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக பெண் ரசிகைகள் மனதில் கனவு நாயகனாக இருக்கும் மாதவன் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசான நிசப்தம் திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் ரசிகர்களால் மாதவனை வில்லனாக பார்க்க முடியவில்லை.
நாகேஷ்: 1000 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர் நடிகர் நாகேஷ். தேன் கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் இவர் ஹீரோவாக நடித்த போது மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.