விஜய் இயக்குனருக்கு ஒரு ஹிட்டு கொடுத்தாச்சு.. மணிரத்தினத்தை டீலில் விட்ட கமல் , அஜித் இயக்குனருடன் கூட்டணி

உலகநாயகன் கமலஹாசனுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் தான். இந்தப் படம் கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்ததோடு மிகப்பெரிய பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. பல மொழிகளிலும் ரீமேக் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தில் கமலஹாசன் முன்பை விட பல மடங்கு எனர்ஜியோடு சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் அடுத்தடுத்து பல இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசன் எந்த இயக்குனருடன் இணைவார் என்பது ஒரு கேள்வியாகவே இருந்தது. அவ்வப்போது ஒரு சில அப்டேட்டுகளும் வந்தன.

இதற்கிடையில் கமலஹாசன், இயக்குனர் மணிரத்தினத்துடன் கைகோர்ப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைவது என்பது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. தற்போதைக்கு மணிரத்னம் பொன்னியின் செல்வன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்தை டீலில் விட்டு விட்டார். கமல் அடுத்து கைகோர்க்க இருப்பது இயக்குனர் எச். வினோத் உடன் தான். எச். வினோத் நடிகர் அஜித்தை வைத்து சமீபத்தில் இயக்கிய துணிவு திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிகர் அஜித்துடன் பண்ணியதால் அடுத்து இவர் யாருடன் இணைவார் என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது கமல், எச். வினோத் கூட்டணி களம் இறங்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இது பற்றி ராஜ்கமல் பிலிம்ஸ் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் எச். வினோத் 2014ஆம் ஆண்டு ரிலீசான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமானது.