Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் மீது சினிமா துறையை சேர்ந்தவர்கள் எத்தனை எதிர்மறை விமர்சனங்களை வைத்தாலும், அவர் இயக்குனர்களுக்கு நண்பனாக ஒவ்வொரு படத்திற்கும் உதவி செய்வதை யாராலும் மறுக்க முடியாது. தன் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் தன்னுடன் இருந்த எத்தனையோ நண்பர்களை இப்போது சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
மேலும் அவரிடம் உதவி என்று வரும் சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்யவும் தவறியதே கிடையாது. அப்படித்தான், ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களான அஜித்குமார் மற்றும் தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஒருவர் சில வருடங்களாகவே வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்தார். தற்போது அந்த இயக்குனருக்கு சிவா பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, அவர் உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படம் இப்போதைக்கு SK 21 என அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே, சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே, சிவா தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குனர் முருகதாசுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் சிவகார்த்திகேயனும், இயக்குனர் ஏ ஆர் முருகதாசும்.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கும் சிவகார்த்திகேயன், அந்த பதிவிலேயே, என்னுடைய 23 வது படத்திற்காக உங்களோடு இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, அதிலும் இந்த படத்தின் கதையை கேட்ட பிறகு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த படம் என்னுடைய சினிமா வாழ்க்கையிலும், உங்களோடு இணைந்து பணியாற்றும் முதல் படம் என்பதிலும் எல்லா விதத்திலும் எனக்கு ரொம்ப முக்கியமானதாக இருக்கும். விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்காக காத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். நடிகர் அஜித்குமாருக்கு தீனா, தளபதி விஜய்க்கு துப்பாக்கி போன்று சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் அமையும் என அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.