கமல் மாதக்கணக்கில் உழைத்ததை, மூன்றே நாள் கால் சீட்டில் தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சிவகுமார் சொன்ன ரகசியம்

நடிகர் சிவகுமார், மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரும் உச்சத்தில் இருந்தபோதே வளர்ந்து வரும் நடிகராக முன்னேறியவர் சிவகுமார். ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் கலக்கியிருக்கிறார். சினிமாவைப் பற்றியும், சினிமா பிரபலங்களை பற்றியும் அதிகமாக அறிந்தவர் இவர்.

சமீபத்தில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற சிவகுமார் ஒரு சில விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். கடந்த கால சினிமாவை பற்றி பேசிய இவர் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.

கடந்த சில வருடங்களாக சிவகுமாரின் சினிமா வாழ்க்கையை பற்றி செய்திகள் வரும் பொழுது அதில் அதிகமாக இடம்பெறுவது புவனா ஒரு கேள்விக்குறி என்னும் திரைப்படம் தான். அந்த படத்தில் சிவக்குமார் வில்லனாகவும், ரஜினிகாந்த் ஹீரோவாகவும் நடித்திருப்பார். அந்த வில்லன் கதாபாத்திரத்தை சிவக்குமார் தான் ஆசைப்பட்டு நடித்ததாகவும், அதனால் தான் அவர் சினிமாவில் தோற்று ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக மாறினார் என்றும் செய்திகள் வெளியாகின.

இதற்கு பதில் சொல்லும் விதமாக பேசிய சிவகுமார் பாரதிராஜா இயக்கத்தில் கமல் மற்றும் ரஜினிகாந்த் நடித்த பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கமல் ஹீரோவாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். கமல் கிட்டத்தட்ட பல மாதங்களாக அந்த சப்பானி கதாபாத்திரத்தில் கஷ்டப்பட்டு நடித்தார். ஆனால் ரஜினி பரட்டை எனும் கதாபாத்திரத்திற்கு மூன்று நாள் மட்டுமே நடித்தார். அதுவும் ஹீரோயினை வன்கொடுமை செய்யும் வில்லனாக நடித்திருப்பார்.

ஆனால் படம் ரிலீசான போது ஹீரோவாக நடித்த கமலை ரசிகர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றும், பரட்டையாக நடித்த ரஜினிகாந்துக்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது என்றும் சிவக்குமார் சொல்லியிருந்தார். அப்படித்தான் புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம் கூட. ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக ஆக வேண்டும் என்பது அவர் தலையில் எழுதப்பட்ட எழுத்து என்றும் அதை யாராலும் மாற்றி இருக்க முடியாது என்றும் சொல்லியிருந்தார்.

மேலும் பேசிய அவர் இன்று ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்றும் பெருமையாக சொல்லி இருந்தார் . ரஜினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் 16 வயதினிலே தான். அவர் நடித்த பரட்டை கதாபாத்திரம் இன்று வரை அவருக்கு பட்டை பெயராக கூட இருக்கிறது. அந்த அளவுக்கு புகழை கொடுத்தது அந்த படம்.