இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். ஹை பட்ஜெட் என்பது சங்கருக்கு ஒரு பிராண்டாகவே மாறிவிட்டது. 1996ல் ரிலீசான இந்தியன் படத்தில் ஆரம்பித்த இவருடைய அதிக பட்ஜெட் ப்ராஜக்ட் இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. சங்கரிடம் வரவேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்கவும் தயாராக இருக்க வேண்டும்.
ஜென்டில் மேன் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியவர் இயக்குனர் சங்கர். ஊழலுக்கு எதிராக நிறைய படங்களை எடுத்திருக்கிறார். அவருடைய படங்களில் மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய மெனக்கிடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படிதான் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிட்டார்.
தெலுங்கில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியை வைத்து ஆர் சி 15 என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அரசியல் கலந்த ஆக்சன் திரைப்படம் ஆகும். ஹைதிராபாத், விசாகபட்டினம், பஞ்சாபில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
சங்கர் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டிருக்கிறார். தென்னிந்திய திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் பாடல் இது. இந்த பாடலுக்கான மொத்த பட்ஜெட் 15 கோடியாம். அதாவது ராம் சரண் மற்றும் கியாரா இடம்பெற இருக்கும் இந்த பாடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
நவம்பர் 20 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த சூட்டிங் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிகிறது. என்னதான் பிரம்மாண்டம் தன்னுடைய அடையாளமாக இருந்தாலும் இப்படி ஒரு பாடல் காட்சிக்கு 15 கோடி செலவிடுவது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது. இவரிடம் சிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் தலையில் துண்டை போட்டு தான் போக வேண்டும் போல.
சங்கருக்கு இதெல்லாம் புதிதல்ல. ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்காக உலக அதிசயங்கள் 7 இடத்திற்கும் சென்று வந்தது படக்குழு. எந்திரனில் ஒரு சின்ன இரயில் சண்டை காட்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். இயக்கும் அத்தனை படங்களிலும் பிரம்மாண்டம் காட்டும் சங்கர் தயாரிப்பு என வந்துவிட்டால் லோ பட்ஜெட் படங்களை தான் தேர்வு செய்வார்.