கமலால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 7 வருடங்களுக்குப் பிறகு ஓகே சொன்ன உலகநாயகன்

சில வருட இடைவெளிக்குப் பிறகு கமல் மீண்டும் தமிழ் சினிமாவில் பிஸியான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். இந்த 68 வயதிலும் அவருக்கு இருக்கும் எனர்ஜியும் சுறுசுறுப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதற்கு உதாரணமாக அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தையே சொல்லலாம். அந்த படத்தில் அவர் கொடுத்த அர்ப்பணிப்பு பலரையும் வியக்க வைத்தது.

தற்போது மணிரத்னத்துடன் ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைத்துள்ள கமல் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு கூட்டணியுடன் மீண்டும் இணைந்து இருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் உத்தம வில்லன்.

அப்படத்தை கமலின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். மேலும் அதில் கமலுடன் இணைந்து இயக்குனர் கே பாலச்சந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அதனால் அந்த படத்தை கமலுடன் இணைந்து தயாரித்திருந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், இயக்குனருமான லிங்குசாமி பெரும் நஷ்டம் அடைந்தார். ஆனால் கமல் அப்போதே அவருக்கு நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்திருந்தார். அதன் பிறகு லிங்குசாமியும் கமலின் தேதிகளுக்காக காத்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்த கமல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார். அதனால் கிட்டத்தட்ட நான்கு வருட காலங்கள் அவர் சினிமாவை மறந்து கட்சி பணிகளுக்காக உழைத்தார். லிங்குசாமியும் அதற்கு பிறகு சரிவர வாய்ப்புகள் இல்லாமல் சண்டைக்கோழி 2 திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் அந்த படமும் பெரிய அளவில் போகாததால் துவண்டு போயிருந்த அவருக்கு சமீபத்தில் எடுத்த தெலுங்கு படமும் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் கமல், லிங்குசாமியுடன் கூட்டணி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஏழு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் கமல் தற்போது இந்த கூட்டணியில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.