மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படம் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
மணிரத்னம் இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை சேர்ந்தே தான் எடுத்திருந்தார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இப்போதே படத்திற்கான ப்ரோமோஷன் வேலையை படக்குழு தொடங்கி விட்டது.
அதன்படி சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற அகநக பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. கடந்த முறை பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி மற்றும் கமல் இருவரும் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றனர்.
இப்போது நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ள பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ஆகையால் பொன்னியின் செல்வன் 2 விழாவிலும் இந்த படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்நிகழ்ச்சிக்காக பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
