தமிழ் சினிமா உலகில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் கவுண்டமணி. இதுதான் நகைச்சுவை என கோலிவுட் நினைத்து கொண்டிருந்த நேரத்தில், எப்படி வேண்டுமானாலும் நகைச்சுவை பண்ணாலாம், ரசிகர்கள் சிரித்தால் போதும் என்ற பாணியை கொண்டு வந்தவர் இவர்.
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படம் எப்படி தமிழ் சினிமாவிற்கு ரஜினி மற்றும் கமல் என்ற இரு பெரும் துருவங்களை கொடுத்ததோ, அதே படத்தின் மூலம் தான் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியையும் கொடுத்தது. தொடக்கத்தில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் பிறகு நகைச்சுவை நடிகரானார்.
கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே இன்றுவரை பிரபலமானவை தான். இவர்களுடைய காமெடிக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றன. கரகாட்டக்காரன், சேரன்-பாண்டியன், சின்ன கவுண்டர் போன்ற படங்களின் காமெடிகள் எல்லாம் அக்மார்க் காட்சிகளாக இன்று வரை தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.
கவுண்டமணி எந்த அளவுக்கு காமெடியில் கலக்குகிறாரோ, அதே அளவுக்கு நிறைய வித்தியாசமான வார்த்தைகளையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். டகால்டி, கோமுட்டி தலையா, போன்ற வார்த்தைகள், அதன் கூட அவர் அடிக்கும் கவுண்டர்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.
ஆனால் அதே நேரத்தில், கவுண்டர்களுடன் சேர்ந்து இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் தேவையில்லாத வார்த்தைகளும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இதனாலேயே இவர் நடிக்கும் படங்கள் தணிக்கைக்கு செல்லும் பொழுது மத்த காட்சிகளை விட காமெடி காட்சிகளை அந்த குழுவினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்ப்பார்களாம்.
இதற்கு காரணம், எந்த நேரம் அவர் என்ன கவுண்டர் அடிப்பார் என்று யாராலும் யூகிக்க முடியாதாம். அதே போன்று நிறைய இடங்களில் ‘நாய்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்திவிடுவதால் அதை தணிக்கை குழு நீக்கி விடுமாம். இதனால் ஒரு கட்டத்தில் கவுண்டமணி அந்த வார்த்தையை தன்னுடைய காமெடி காட்சிகளில் உபயோகிப்பதையே நிறுத்தி விட்டாராம்.