சிம்புவை அணு அணுவாக செதுக்கிய டி.ராஜேந்தர்.. கமலால் கூட முடியாததை செய்து காட்டிய வீராசாமி

Actor Simbu: நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் கூல் சுரேஷ் எங்கு சென்றாலும் அந்த படத்தைப் பற்றி பேசாமல் வரமாட்டார். அது அப்போது மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது. சிம்புவுக்கு இப்படி ஒரு பிரமோஷனா என எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். உண்மையிலேயே சிம்புவுக்கு போகும் இடமெல்லாம் பிரமோஷன் செய்து அவரை பெரிய அளவில் வளர்த்து விட்ட பங்கு அவருடைய அப்பா டி ராஜேந்தருக்கு தான் அதிகம்.

படாத பாடுபட்ட டி ராஜேந்தர்

ஆரம்ப காலகட்டங்களில் சிம்புவுக்காக டி ராஜேந்தர் அதிகமாக மெனக்கெட்டு உழைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். ராஜேந்தர் இயக்கி, நடித்த படங்கள் அத்தனையிலுமே சிம்பு இருப்பார். இன்னும் சொல்லப்போனால் சிம்புவுக்கு 3, 4 வயது இருக்கும் போதே இயக்கத்தில் உதவி, ஒளிப்பதிவில் உதவி, நடனத்தில் உதவி என தன்னுடைய படங்களின் டைட்டில் கார்டுகளில் எப்படியாவது சிம்புவின் பெயரை வர வைத்து விடுவார் டி ராஜேந்தர்.

டி ராஜேந்தரின் படங்களில் ஹீரோவுக்கு சின்ன வயது ஃபிளாஷ்பாக் இருந்தால் கண்டிப்பாக அதில் சிம்பு தான் நடிப்பார். ஹீரோவுக்கு கதையின்படி மகன் அல்லது சகோதரியின் மகன் இருந்தால் கண்டிப்பாக அந்த கேரக்டரில் சிம்பு தான் நடித்தே ஆக வேண்டும். சின்ன குழந்தையாக இருக்கும் பொழுதே சிம்பு அப்பா சொல்லிக் கொடுப்பதை அப்படியே அச்சு பிசறாமல் நடிப்பார். தன் மகனுக்கு போராடி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வாங்கி கொடுத்து விட்டார் டி ராஜேந்தர்.

சிம்பு தன் அப்பாவை போலவே படம் இயக்குவது, கதை திரைக்கதை அமைப்பது, எதுகை மோனை வசனம் பேசுவது என அத்தனையும் கற்றுக் கொண்டார். சிம்பு சின்ன வயதில் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் அவருடைய அப்பா டி ஆர் பெயரை காட்சிக்கு காட்சி சொல்லிக்கொண்டே இருக்கும் அளவுக்கு தான் வசனம் அமைக்கப்பட்டிருக்கும். சின்ன வயதிலேயே சிம்புவை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பதிய வைத்து விட்டார் டி ஆர்.

நடிகர் சிம்பு அவருடைய அப்பாவின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 12 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் கமல் கூட சின்ன வயதில் இத்தனை படங்களில் நடித்ததில்லை. தன்னுடைய மகனை குழந்தையிலிருந்து சினிமாவுக்காக முழுக்க தயார்படுத்தி வைத்து விட்டார் டி ராஜேந்தர்.

அதுமட்டுமில்லாமல் பல மேடைகளில் தன் மகன் படும் கஷ்டங்களை தாங்க முடியாமல் ஒரு தந்தையாக கண்ணீர் விட்டு கதறி அழுதவர் தான் டி ராஜேந்தர். இன்றுவரை எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சிம்புவை பற்றி பேசாமல் அவர் இருந்ததே கிடையாது. பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எதைப் பற்றி கேள்வி கேட்டாலும், அந்த பதிலில் எப்படியாவது சிம்புவை நுழைத்து அவருடைய பெயரை ரிஜிஸ்டர் செய்து விடுவார் டி ஆர்.