பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து

பிக்பாஸ் சீசன் 6 முந்தைய இரண்டு சீசன்களை ஒப்பிடும் போது ஆரம்பித்த இரண்டு வாரத்திலேயே நல்ல சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸின் முந்தைய சீசன்களில் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று ஒரு கருத்து இருந்தது. அதை மறுக்கும் விதமாக இம்முறை வெளியில் இருந்து நிறைய போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.

அதில் ஒருவராக வந்தவர் தான் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து. கொரோனா லாக்டவுன் காலத்தில் தன்னுடைய வித்தியாசமான கண்டென்ட்டுகளினால் டிக்டாக்கில் பிரபலமானவர். தொடக்கத்தில் இவருக்கு எதிர்ப்புகள் மட்டுமே இருந்தது. நாளடைவில் ரசிகர்களும் இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இவரை ட்ரோல் செய்வதற்கு வரும் லெட்டர்களை படித்து வீடியோ போடுவதை வழக்கமாக கொண்டிருந்த முத்துவுக்கு பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் முத்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கடந்த சீசனிலேயே தகவல்கள் வந்தன. அந்த வாய்ப்பை மறுத்த ஜி பி முத்து இந்த சீசனில் கலந்து கொண்டார். ஜி பி முத்துவுக்காகவே பலதரப்பட்ட மக்களும் பிக்பாசை பார்க்க ஆரம்பித்தனர். இப்போது முத்து பிக்பாசை விட்டு வெளியேறியது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகிவிட்டது.

ஜி பி முத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். முத்துவினால் தான் இவருடைய ஊர் உடன்குடி உலகமெங்கும் பேமஸ் ஆனது. இவரை தேடி நிறைய பேர் அந்த ஊருக்கு சென்று நேரில் சந்தித்து இருக்கின்றனர். முத்துவின் கள்ளம் கபடமில்லா பேச்சு மற்றும் அவருடைய வட்டார மொழிக்காகவே அவரை ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனது.

மரக்கடை வைத்திருக்கும் முத்துவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஜி பி அவருடைய மனைவி மாற்று குழந்தைகளுடன் போடும் வீடியோ பார்வையாளர்களால் அதிகம் ரசிக்கப்படும். முத்துவுக்கு அவர் குடும்பத்தின் மீது அதீத பாசம் உண்டு. இதில் அவருடைய மகன் விஷ்ணுவுக்கு அடிக்கடி பிட்ஸ் வருமாம். இதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்த முத்து கடந்த வாரமே வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய எபிசோடில் முத்து தனக்கு பணம், புகழ் எதுவுமே வேண்டாம் எனவும், என்னுடைய மகன் தான் முக்கியம் என்றும் கூறி வெளியேறிவிட்டார். ஜி பி முத்து வெளியேறிது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும்,அவருடைய பிள்ளைகளின் மீதான அவருடைய பாசம் பார்வையாளர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும், கமலஹாசனையும் கூட நெகிழச்செய்தது.