K Balachander – Sivaji Ganesan: இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தமிழ் சினிமாவை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றவர். இவருடைய ஒரு படம் கூட எதார்த்தத்தை மீறி எடுக்கப்பட்டது இல்லை. ஒவ்வொரு கதையும் நம் வாழ்க்கையில், அல்லது அக்கம் பக்கம் வீட்டில் நடப்பது போல் தான் இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் என்ற இரு பெரும் துருவங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இவர் கடைசி வரை பிரபலங்களை வைத்து படம் எடுக்கவே இல்லை.
பாலச்சந்தரின் நிறைய படங்கள் கதாநாயகிகளை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டு இருக்கும். மேலும் சமூக விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட படங்களை இவர் அதிகம் இயக்கியிருக்கிறார். காமெடியனாக இருந்த நடிகர் நாகேஷை தன்னுடைய படங்களில் ஹீரோவாக்கி அழகு பார்த்த பாலச்சந்தர், தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தால் பிரபலங்களை வைத்து படம் பண்ணுவதில்லை என முடிவெடுத்து இருக்கிறார்.
1970 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கே ஆர் விஜயாவை வைத்து பாலச்சந்தர் இயக்கிய படம் தான் எதிரொலி. ஒரு நேர்மையான வழக்கறிஞராக இருக்கும் சிவாஜி கணேசனுக்கு தொடர்வண்டியில் கிடைக்கும் ஒரு பணப்பெட்டியால் அவருடைய நிம்மதி கெடுவதோடு, எப்போது அந்த பணத்தை தேடி போலீஸ் வருமோ என அவர் பயந்து கொண்டே வாழ்வது என கதை அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதற்கு முக்கிய காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். படத்தின் கதை நன்றாக அமைந்திருந்தோம், கதையின் ஹீரோ சிவாஜி என்பதால் அவருடைய ரசிகர்களுக்கு அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது தான் படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
பிரபலங்களை வைத்து படம் இயக்கும் பொழுது தன்னுடைய கதைக்கு ஏற்றவாறு அவர்களை நடிக்க வைக்க முடியாது என பாலச்சந்தர் புரிந்து கொண்டார். ஒருவேளை எதிரொலி படத்தில் ஏதாவது ஒரு புதுமுகம் நடித்திருந்தால் கண்டிப்பாக படம் வெற்றி பெற்றிருக்கும் என நினைத்திருக்கிறார். பிரபல நடிகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்து அவர்களுக்கு ஏற்ற மாதிரி கதை எழுதவும் அவருக்கு விருப்பமில்லை.
இதனாலேயே மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் பாலச்சந்தர் படம் பண்ணவில்லை. அதேபோன்று ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அறிமுக ஹீரோக்களாக இருக்கும் வரை தொடர்ந்து அவர்களை தன்னுடைய படங்களின் நடிக்க வைத்த இவர், அவர்கள் உச்சம் தொட்ட பிறகு படம் பண்ணுவது நிறுத்திவிட்டார். ஒரு இயக்குனர் தன்னுடைய கதையை யாருக்காகவும் மாற்றக்கூடாது என்பதில் இயக்குனர் சிகரம் உறுதியாக இருந்திருக்கிறார்.