மனோபாலாவை ஒரு காமெடி நடிகராக தெரிந்த பலருக்கும் அவரை ஒரு இயக்குனராக அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தமிழில் 40 படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த மனோபாலா பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் திரைப்படமும் ஒன்று.
பின்னர் அவ்வப்போது சின்ன சின்ன கேரக்டர்களில் சினிமாவில் தலை காட்டி வந்த இவர் காமெடி நடிகராகவும் அவதாரம் எடுத்தார். விவேக், வடிவேலு, சந்தானத்திற்கு இணையாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பக்கூடிய மனோபாலா, எல்லோரிடமும் நட்புடன் பழகக்கூடிய குணமுடையவர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கூட ரொம்பவும் நகைச்சுவையாகவும், எளிமையாகவும் இவர் பேசுவார்.
ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர் இன்றைய இளம் கதாநாயகர்களாக இருக்கும் விமல், மிர்ச்சி சிவா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடனும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தில் மனோபாலா காமெடி காட்சிகளில் பயங்கரமாக அசத்தியிருப்பார். மேலும் அந்த ஹீரோக்களுடனும் அன்பாக பழகும் குணமுடையவர்.
எப்போதுமே ரொம்ப ஸ்டைலிஷ் ஆக உடை அணியக்கூடிய மனோபாலா, சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது, ஏதேனும் கருத்துக்களை பகிர்வது என தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வார். இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டபின் அவருடைய கடைசி சமூக வலைதள பதிவை நெட்டிசன்கள் தற்போது வைரல் ஆக்கி வருகிறார்கள்.
நடிகர் மனோபாலாவின் கடைசி பதிவு

மனோபாலா கடந்த ஒரு மாதமாகவே சோசியல் மீடியாவில் எந்த விஷயத்தையும் பதிவிடவில்லை, கடைசியாக மார்ச் 16ஆம் தேதி சிகப்பு சட்டை மற்றும் சிகப்பு வேஷ்டி அணிந்து ஒரு சாமியாரின் படம் அருகே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். தற்போது இதுதான் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த மனோபாலா தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு இதய பிரச்சினை ஏற்படவே கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோவும் செய்திருக்கிறார்கள். மனோபாலாவை இறுதியாக காமெடி நடிகர் மயில்சாமியின் மறைவின் போது மீடியா முன் பார்த்தது. உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த இவர் இன்று அகால மரணம் அடைந்திருக்கிறார்.