பண்டிகை நாட்கள் என்றாலே எல்லாருக்கும் ஒரே குதூகலமாக தான் இருக்கும். அதிலும் சினிமா ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இந்த வருட தீபாவளி பண்டிகையை களை கட்ட வைக்க மாஸ் ஹீரோக்கள் பலரும் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் இந்த வம்பே வேண்டாம் என்று தற்போது கார்த்தி இந்த ரேஸில் இருந்து பின்வாங்கி இருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
அதாவது ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படம் கார்த்திக்கு 25 ஆவது படமாக அமைந்துள்ளது. அதனாலேயே இந்த படத்தை வேற லெவல் வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்றும் பாக்ஸ் ஆபிஸை கலக்க வேண்டும் என்றும் கார்த்தி ஆசைப்படுகிறார். அதை தொடர்ந்து படத்தை பண்டிகை தினத்தன்று வெளியிட வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தார்.
இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஏனென்றால் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்த இந்தியன் 2 அடுத்த வருடம் தள்ளிப் போயிருக்கிறது. அதேபோன்று ஜெயிலர் படமும் ஆகஸ்ட் மாதமே வெளிவர இருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் ஜப்பான் தீபாவளிக்கு களமிறங்க இருந்தது.
ஆனால் இப்போது அந்த நாளில் படத்தை வெளியிட்டால் கல்லா கட்ட முடியாது என்ற முன்னேற்பாடுடன் இப்படம் வரும் செப்டம்பர் மாதமே வெளிவர இருக்கிறது. ஏனென்றால் இந்த வருட தீபாவளிக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.
இந்த மூன்று படங்களுமே மாறுபட்ட கதை அமைப்பை கொண்ட படங்களாகும். அதனாலயே இதற்கான எதிர்பார்ப்பும் இப்போது பயங்கரமாக இருக்கிறது. அதன் காரணமாகவே இப்போது ஜப்பான் விநாயகர் சதுர்த்தியை குறிவைத்து களமிறங்க இருக்கிறது. இதன் மூலம் எதிர்பார்த்த வசூல் வரும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அதே பண்டிகை தினத்தை முன்னிட்டு மிகப்பெரும் ஆவலை தூண்டி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படமும் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் நேருக்கு நேர் மோத இருக்கும் இந்த படங்கள் எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது ஆரம்பித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் போட்டி போட முடியாமல் கார்த்தி பின்வாங்கி இருப்பது சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.