நடிகர் நாகேஷிற்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இடையேயான நட்பு கோலிவுட்டில் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் நட்பு பிரிய காரணமாக இருந்தவர் மக்கள் திலகம் MGR என்பது யாருக்கும் தெரியாது. 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணவே இல்லை.
தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளி ராஜன் , பாலையா இருந்த காலங்களில் நாகேஷின் நகைச்சுவை இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. நாகேஷ் காமெடிகள் இல்லாத படங்களே இல்லை எனலாம். வளர்ந்து வரும் நாயகர்களின் படங்களில் நாகேஷ் நடித்தாலே வெற்றி ஆகி விடும். நாகேஷ் இல்லாத MGR, சிவாஜி படங்களே இல்லை. இதனால் நாகேஷ் அவர்கள் இருவருக்குமே மிகவும் நெருக்கமானவர்.
இயக்குனர் பாலச்சந்தர் எதார்த்தமான வாழ்வியலை காட்சிப்படுத்தும் இயக்குனர். படத்தின் வெற்றிக்காக தேவை இல்லாத மசாலாக்கள் சேர்க்கவும் மாட்டார். நாயகர்களுக்காக பன்ச் டயலாக்கும் வைக்க மாட்டார். ரஜினி, கமல் என்ற மிகப்பெரிய நட்சத்திரங்களை கோலிவுட்டிற்கு கொடுத்தவர்.
நாகேஷ் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படத்திற்கு பாலச்சந்தர் தான் திரைக்கதை எழுதினார். அடுத்து அவர் முதலில் இயக்கிய நீர்க்குமிழி திரைப்படத்தில் நாகேஷை தான் நடிக்க வைத்தார். இந்த படத்தில் கோபால கிருஷ்ணன், சௌகார் ஜானகியும் நடித்திருந்தனர்.
அதன் பிறகு பாலச்சந்தரின் நீல வானம், நாணல், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, தாமரை நெஞ்சம், பூவா தலையா, எதிர் நீச்சல், இரு கோடுகள், நூற்றுக்கு நூறு என அடுத்தடுத்த வந்த பாலச்சந்தர் திரைப்படங்களில் நாகேஷ் இடம்பெற்றிருந்தார். இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பும் உருவானது.
1972 ஆம் ஆண்டு பாலச்சந்தர் ஜெமினி கணேசனை வைத்து வெள்ளி விழா என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்த படத்தில் நாகேஷ் ஒப்பந்தமாகி இருந்தார் ஆனால் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு வராமல் MGR பட ஷூட்டிங் ஒன்றிற்கு சென்று விட்டார். சென்றது மட்டுமல்லாமல் MGR பட இயக்குனரே தன்னை நேரடியாக வந்து அழைத்ததாக திமிராக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த KB நாகேஷை அந்த படத்திலிருந்து தூக்கி விட்டு தேங்காய் சீனிவாசனை போட்டு விட்டார். இப்படி MGR படத்தினால் KB – நாகேஷ் நட்பு பிரிந்தது.